அபராதமெல்லாம் ஒன்னும் கிடையாது... மக்களை மாஸ்க் போட வைக்க போலீஸ் சூப்பர் ஐடியா... என்னனு தெரியுமா?
மக்களை மாஸ்க் அணிய வைப்பதற்காக, புது ஐடியா ஒன்றை காவல் துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையிலும், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. எனவே முன்பு போல் அல்லாமல் தற்போது வாகன போக்குவரத்து ஓரளவிற்கு சீராகியுள்ளது. ஆனால் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதற்கு இன்னமும் பல்வேறு கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இந்த கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அபராதம் விதிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். ஆனால் தேவை இல்லாமல் வாகனம் இயக்குபவர்களை, காவல் துறையினரால் இன்னமும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர்களின் வாகனங்கள் காவல் துறையினரால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு கொண்டே வருகின்றன. ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகத்தில் மட்டும் தற்போது வரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான் காணப்படுகிறது.

இதுதவிர மாஸ்க் அணிவதையும் வாகன ஓட்டிகள் பலர் கடைபிடிப்பதில்லை. பொது வெளிக்கு வரும்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. முக கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலை ஓரளவிற்கு தடுக்க முடியும். ஆனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இதனை கடைபிடிப்பதில்லை.

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து விதித்து சலித்து போய், தற்போது வித்தியாசமான ஒரு நடவடிக்கையை காவல் துறையினர் எடுத்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஃபைரோசாபாத் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து இந்த வித்தியாசமான முயற்சியை தற்போது முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி மாஸ்க் அணியாமல் வருபவர்கள், ''மாஸ்க் அணிய வேண்டும்'' என்ற வாசகத்தை 500 முறை எழுத வேண்டும். அதற்கு முன்பாக அவர்கள் ஒரு வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். இந்த வகுப்பில் காவல் துறையை சேர்ந்த அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகளும் இருப்பார்கள். மாஸ்க் அணியாதவர்கள் மீது காவல் துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது.

ஆனால் அவர்கள் அந்த வகுப்பில் 3-4 மணி நேரத்தை செலவிட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு இந்த வகுப்பில் பாடம் நடத்தப்படும். இதன்படி அவர்களுக்கு முதலில் ஒரு வீடியோ காட்டப்படும். இந்த வீடியோவில் மாஸ்க் அணிவதன் மூலம் கிடைக்ககூடிய நன்மைகள் மற்றும் மாஸ்க் அணிவதன் அவசியம் பற்றி விளக்கப்படும்.

அதன்பிறகு ''மாஸ்க் அணிய வேண்டும்'' என்ற வாசகத்தை அவர்கள் 500 முறை எழுத வைக்கப்படுவார்கள்'' என்றனர். இந்த ஐடியாவிற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று காவல் துறையினர் நம்புகின்றனர். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம். அதேபோல் காரில் பயணம் செய்யும்போது சீட்பெல்ட் அணிவது அவசியம்.

இந்த வரிசையில் தற்போது முக கவசமும் இணைந்துள்ளது. நீங்கள் வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும், மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். நீங்கள் வாகனங்களில் சென்றாலும் சரி அல்லது நடந்து சென்றாலும் சரி, மாஸ்க் அணிவது நல்லது. கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும் பரவலாம் என தற்போது எச்சரிக்கப்பட்டு வருவதை நினைவில் கொள்ளுங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








