சாப்பாடு இல்லாமல் 2,300 கிமீ பைக்கில் பயணித்த இன்ஜினியர்... காரணத்தை கேட்டு கண் கலங்கிய தமிழகம்...
இன்ஜினியர் ஒருவர் சாப்பாடு இல்லாமலேயே குஜராத்தில் இருந்து பைக்கில் சுமார் 2,300 கிமீ பயணம் செய்து தமிழகம் வந்துள்ளார்.

கொரோனா வைரஸை (கோவிட்-19) எதிர்கொள்ள முடியாமல், மனித இனமே தடுமாறி வருகிறது. தடுப்பூசி, மருந்துகள் கண்டறியும் பணி ஒரு பக்கம் மிக தீவிரமாக நடந்து வந்தாலும், மறுபக்கம் மனித உயிர்களை கொத்து கொத்தாக பறித்து வருகிறது கொரோனா. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளை கொரோனா மிக கடுமையாக தாக்கியுள்ளது.

இந்தியாவையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலின் ஹாட் ஸ்பாட்டாக, இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பை மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே மாதம் 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி, கொரோனா வைரஸின் தீவிரம் புரியாமல் வாகனங்களில் ஒரு சிலர் ஊர் சுற்றி கொண்டுதான் உள்ளனர்.

அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு சிலர் அனாவசியமாக வாகனங்களில் சுற்றி வரும் நிலையில், மறுபக்கம் மிகவும் அவசியமான காரணங்களுக்காக ஒரு சிலர் ரிஸ்க் எடுத்து தொலை தூர பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவர் மதுரையில் இருந்து தேனிக்கு, சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் தமிழகத்தை நெகிழ வைத்தது. உடல் நிலை சரியில்லாத தனது தாய் கூறியதால், தேனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக பழுதான சைக்கிளில் அந்த இளைஞர் பயணம் மேற்கொண்டார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, பஸ், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், அந்த இளைஞர் ரிஸ்க் எடுத்து சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த வரிசையில் அதேபோன்றதொரு மற்றொரு சம்பவமும் தற்போது நடைபெற்றுள்ளது. இன்ஜினியர் ஒருவர் தாய் பாசம் காரணமாக பைக்கிலேயே சுமார் 2,300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார்.

அவரது பெயர் சந்திரமோகன். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். ஆனால் இவரது குடும்பத்தினர் அனைவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியில் வசிக்கின்றனர். தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எல்லாம் தமிழகத்தில் இருக்க, சந்திரமோகன் அகமதாபாத்தில் வேலை செய்து வருகிறார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில், பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்பட்டதால், சந்திரமோகனால் வத்திராயிருப்பு திரும்ப முடியவில்லை. எனவே அவர் குஜராத்திலேயே தங்கி விட்டார். இப்படிப்பட்ட சூழலில், சந்திரமோகனின் தாயாருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஊர் திரும்பியாக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது. எனினும் பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக முடங்கியிருக்கும் தற்போதைய சூழலில், எப்படி ஊர் செல்வது? என தெரியாமல் சந்திரமோகன் தவித்தார். இருந்தபோதும் பைக் மூலமாக தமிழகம் சென்று விடலாம் என்ற முடிவை அவர் எடுத்தார். எனவே ஆன்லைன் மூலம் அவர் விண்ணப்பம் செய்தார்.

இதற்கு அனுமதி கிடைத்ததால், அகமதாபாத் நகரில் இருந்து கடந்த 22ம் தேதி காலை இரு சக்கர வாகனத்தில் அவர் புறப்பட்டார். குஜராத் மாநிலத்தில் இருந்து தொடங்கிய அவர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழகம் வந்தடைந்தார். இதன்பின் கரூர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அவர் பயணம் மேற்கொண்டார்.

அப்போது கரூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்த பயணம் குறித்து சந்திரமோகன் கூறுகையில், '' ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு குஜராத்திலேயே ஒரு மாதமாக தங்கியிருந்தேன். தொண்டு நிறுவனங்கள் மூலமாக எனக்கு இருவேளை உணவு கிடைத்து வந்தது. இந்த சமயத்தில் எனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்தது.

எனவே இரு சக்கர வாகனத்திலேயே புறப்பட்டு வந்து விட்டேன். நான் பயணம் செய்த வழித்தடம் வனப்பகுதி நிறைந்தது. எனவே பகல் நேரங்களில் மட்டுமே பைக்கை ஓட்டுவேன். இரவு நேரங்களில் ஏதேனும் ஒரு பெட்ரோல் பங்க்கில் தங்கி கொள்வேன். நான் பயணம் செய்து வந்த மஹாராஷ்டிரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் உணவு கிடைக்கவில்லை.

அங்கு வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீர் ஆகியவைதான் எனக்கு உணவாக இருந்தது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி கிளம்பிய நான் இன்று (ஏப்ரல் 25) தமிழக எல்லைக்குள் வந்தேன். தமிழக எல்லைக்குள் வந்த பின்தான் எனக்கு சாப்பாடு கிடைத்தது'' என்றார். இன்ஜினியர் சந்திரமோகன் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தொலைவு சுமார் 2,300 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்க்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், சாப்பாடு இல்லாமலேயே பைக்கில் 2,300 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த பொறியாளர் சந்திரமோகனின் கதை தமிழக மக்களை நெகிழ வைத்துள்ளது. பொதுவாக இரு சக்கர வாகனங்களில் இவ்வளவு கிலோ மீட்டர்கள் பயணம் செய்வது என்பது மிகவும் சவாலான காரியம்தான்.


Click it and Unblock the Notifications








