சைக்கிளில் ஊருக்கு போக 10 நாள் ஆகும்... கூலி தொழிலாளி சொன்ன காரணத்தை கேட்டதும் அனுப்பி வைத்த போலீஸ்
10 நாள் ஆகும் என்பதையும் பொருட்படுத்தாமல், கூலி தொழிலாளி ஒருவர் கண்ணீருடன் தனது சொந்த ஊருக்கு பயணித்து கொண்டுள்ளார்.

நமது வாழ்க்கை முறையில் முன்னெப்போதும் இல்லாத வித்தியாசத்தை கொரோனா வைரஸ் (கோவிட்-19), கொண்டு வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக, நம்மில் பெரும்பாலானோர் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கிறோம். சுகாதார துறை, காவல் துறை, பத்திரிக்கை துறை போன்ற அத்தியாவசியமான பணிகளில் ஈடுபட்டிருப்போர் மட்டுமே தங்கள் பணியை வழக்கம் போல் மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் முதல் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பின்பும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஆட்டோ, டாக்ஸிகளும் இயங்குவதில்லை. பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதால், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்றவர்கள் அங்கேயே சிக்கி கொண்டுள்ளனர். ஆனால் இதில் ஊரடங்கு காரணமாக வேலையிழந்த பலர் சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் ரிஸ்க் எடுத்து சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

மேலும் அவசிய தேவை இருப்பவர்களும் சிறப்பு பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டுள்ளனர். இதில், சைக்கிளில் பயணம் செய்பவர்களின் நிலைமைதான் இருப்பதிலேயே கொடுமையானது. சரியான உணவு, தண்ணீர் இல்லாமல், 1,000 கிலோ மீட்டர்களுக்கு மேலான தூரத்தை கூட சைக்கிள் மிதித்து கடந்து வருகின்றனர்.

இந்த வரிசையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து பீகாருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டிருக்கும் கூலி தொழிலாளி ஒருவர் பற்றிய விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. டெல்லி-ஃபரிதாபாத் எல்லையில், கூலி தொழிலாளி ஒருவர் இன்று (ஏப்ரல் 30) தடுத்து நிறுத்தி விசாரிக்கப்பட்டார். அப்போது அவர் பீகாரில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

அதாவது ஹரியானாவில் இருந்து பீகாருக்கு அவர் சைக்கிளிலேயே சென்று கொண்டுள்ளார். அங்கு இருந்த அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர் கண்ணீர் விட்டு அழ தொடங்கி விட்டார். அப்போது அவர் கூறுகையில், ''எனது சகோதரர் உயிரிழந்து விட்டார். எனவே நான் உடனடியாக வீட்டுக்கு சென்றாக வேண்டும்.

நான் எனது வீடு சென்று சேர்வதற்கு 8 முதல் 10 நாட்கள் வரை ஆகி விடும். இருந்தாலும் நான் அங்கு சென்றே ஆக வேண்டும்'' என்றார். சகோதரர் மரணம் அடைந்து விட்டதாக கூறிய காரணத்தால் அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''தனது சகோதரர் மரணமடைந்து விட்டதற்கான சான்றிதழை காட்டியதால் அவரை அங்கிருந்து செல்ல அனுமதித்தோம்'' என்றனர்.
அதே சமயம் அவர் மீது சந்தேகம் இருக்கிறது என்கிற ரீதியிலும் காவல் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''எல்லையை கடப்பதற்காக அவர் கூறிய காரணம் உண்மையானதுதானா? என்பது தெளிவாக தெரியவில்லை'' என்றனர். போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், பலர் இப்படி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications