எந்த நாட்டிற்கும் இல்லாத துணிச்சல்... சத்தமே இல்லாமல் தரமான சம்பவத்தை செய்த இந்தியா... செம கெத்து...
உலகின் பல்வேறு நாடுகளும் செய்ய தயங்கிய ஒரு காரியத்தை, இந்தியா துணிச்சலாக செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் (கோவிட்-19) முடக்கி போட்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் கோவிட்-19 வைரஸை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. எனினும் கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனா, பாதிப்புகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது.

ஆனால் உலகின் மற்ற நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்திய மக்கள் இதற்கு முன் இப்படி ஒரு ஊரடங்கை பார்த்ததில்லை. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து, ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. கார், டூவீலர் போன்ற தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேவையில்லாமல் இயக்கப்படும் தனியார் வாகனங்களை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்படி இந்தியா முழுவதும் தற்போது வரையில் லட்சக்கணக்கான வாகனங்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அத்தியாவசிய சரக்குகளை ஏற்றி செல்லும் லாரி போன்ற வாகனங்கள் மட்டுமே இயங்கி கொண்டுள்ளன.

பேருந்து சேவைகள் மட்டுமல்லாது, விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளை பொறுத்தவரை, அனைத்து கமர்ஷியல் பாஞ்சர் விமானங்களும் ரத்தாகியுள்ளன. அதேசமயம் சரக்கு விமானங்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோரை வெளியேற்றும் விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை டிஜிசிஏ (DGCA - Directorate General of Civil Aviation) வழங்கியுள்ளது. எனவே அத்தியாவசியமான பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை இந்திய விமான படை (IAF - Indian Air Force) தற்போது மேற்கொண்டு வருகிறது. அதிக அளவிலான சரக்குகளை இந்திய விமான படை கையாண்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி சுமார் 600 டன்கள் அளவிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை இந்திய விமான படை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது. இது ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை கொண்டு செல்லப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் அளவாகும். இந்த தகவலை பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய விமான படையின் போக்குவரத்து விமானம், கடந்த ஏப்ரல் 25ம் தேதி, மிசோரம் மாநிலத்தில் ஐஸ்வால் நகரில் இருக்கும் லெங்கூபி ஏர்போர்ட்டில் தரையிறங்கியது. இதில், கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிட, 22 டன்கள் அளவில் மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இது மிசோரம் மற்றும் மேகாலாயா ஆகிய அரசுகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் ஆகும்.

அதற்கு முன்னதாக இந்திய அரசாங்கத்திடம் குவைத் கேட்டு கொண்டதன் பேரில், ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (Armed Forces Medical Services-AFMS), 15 பேர் கொண்ட விரைவு செயலாற்று குழு குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் கடந்த ஏப்ரல் 11ம் தேதி குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பணி முடிந்த நிலையில், இந்திய விமான படையின் சி-130 விமானத்தில் (C-130 Aircraft), கடந்த ஏப்ரல் 25ம் தேதி அவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். குவைத்தில் இருந்து இந்தியா திரும்பி வரும்போது மகத்தான காரியம் ஒன்றையும் அவர்கள் செய்துள்ளனர். கேன்சரால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி ஒருவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவையிருந்தது.

எனவே அந்த சிறுமி மற்றும் அவரது தந்தை இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அந்த சிறுமியை இந்தியா அழைத்து வந்தாக வேண்டிய கட்டாயத்தில் அவரது குடும்பம் தவித்து கொண்டிருந்த நேரத்தில், 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினருடன் அவர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய விமான படையை போலவே, ஏர் இந்தியாவும் சிறப்பான சேவையை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சம் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தங்கள் குடிமக்களையே பத்திரமாக மீட்டு கொண்டு வர தயங்கின.

ஆனால் பெரும்பாலானோரால் அடிக்கடி கிண்டல் செய்யப்படும் ஏர் இந்தியாவின் விமானங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பறந்து சென்று, அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தன. இதன் உச்சகட்டமாக, கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்படும் சீனாவின் வுஹான் நகரத்திற்கே துணிச்சலாக சென்ற ஏர் இந்தியா விமானம், அங்கிருந்தும் இந்தியர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








