குடும்பத்தை காப்பாற்ற மாற்றி யோசித்த டிரைவர்... மனதை நெகிழ வைக்கும் சம்பவம்... என்னனு தெரியுமா?
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக டாக்ஸி டிரைவர் ஒருவர் மாற்றி யோசித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே நிலைகுலைய வைத்துள்ளது. கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வருவதுடன், உலக பொருளாதாரத்தையும் சீட்டு கட்டு போல அப்படியே சரித்து விட்டுள்ளது கோவிட்-19 வைரஸ். இந்த பெருந்தொற்றால் பொருளாதார ரீதியாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் ஆட்டோமொபைல் துறை முக்கியமானது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த இந்த ஊரடங்கு, பின்னர் மே 3, மே 17ம் தேதி வரை என தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இதன் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டீலர்ஷிப்களும் மூடப்பட்டு, வாகன விற்பனையும் முடங்கியுள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். மேலும் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் டீலர்ஷிப்கள் தங்கள் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

வாகன உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது, ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரமும் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து பொது போக்குவரத்து முடங்கியுள்ளது. பஸ், ரயில் மட்டுமல்லாது, ஆட்டோ, டாக்ஸிகளும் இயங்குவதில்லை.

இதனால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் பலர், தினசரி கிடைக்கும் வருமானத்தை கொண்டுதான் குடும்பம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வேலை இழந்ததன் காரணமாக, குடும்பத்தை நடத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு கொண்டுள்ளனர். தினசரி செலவுகளையே சமாளிக்க முடியவில்லை என அவர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஜிஜோவும் அவர்களில் ஒருவர். இவர் ஆன்லைன் டிரைவர்கள் யூனியனின் மாநில பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்ஸி டிரைவராக வேலை செய்து வந்த ஜிஜோ தற்போதைய லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசு பொது போக்குவரத்தை தடை செய்ததால், ஜிஜோ வேலையிழந்தார்.

ஆனால் மனம் சோர்ந்து விடாமல், அவர் தற்போது முக கவசங்களை விற்பனை செய்பவராக மாறியுள்ளார். அவரது டாக்ஸியும், மாஸ்குகளை விற்பனை செய்யும் நிலையமாக மாறியுள்ளது. ஜிஜோ தனது காருக்கு மாதந்தோறும் 9,500 ரூபாய் இஎம்ஐ செலுத்தியாக வேண்டும். இப்படிப்பட்ட பொருளாதார சுமையுடன், மாதாமாதம் வீட்டு வாடகையை செலுத்த வேண்டிய நெருக்கடியும் ஜிஜோவுக்கு உள்ளது.

இதனால் மாஸ்க் விற்பனை செய்பவராக ஜிஜோ மாறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''தினசரி செலவுகளை சமாளிப்பதற்கு கூட என்னால் வருமானம் ஈட்ட முடியவில்லை. எனவே என் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக, மாஸ்க் விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்'' என்றார்.

வயதான பெற்றோர், 2 குழந்தைகள் மற்றும் மனைவி என பெரிய குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஜிஜோவுக்கு இருக்கிறது. எனவே வேலையிழந்த சமயத்திலும், ஏதாவது ஒன்றை செய்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவர் முக கவசங்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இதுகுறித்து மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது.

இவரை போல் இன்னும் பல்வேறு டிரைவர்கள், லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. எனினும் ஊரடங்கில் தற்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை சார்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பை பெற தொடங்கியுள்ளனர். வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் டீலர்ஷிப்களில் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பொது போக்குவரத்திற்கு இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் நீடித்து வருகின்றன.

ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களை போல், விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காரணமாக, விமான போக்குவரத்து துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் மிக கடுமையான பாதிப்பை கண்ட துறைகளில் முக்கியமானதாக விமான போக்குவரத்து உள்ளது.

உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வருவாய் இல்லாமல் விமான நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. இதன் காரணமாக ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில், பல்வேறு விமான நிறுவனங்களும் இறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








