உதவிக்கு ஓடி வந்த பல மாநிலங்கள்... 2,300 கிமீ காரில் பயணித்த இளைஞர்... நாட்டையே கலங்க வைத்த சம்பவம்
ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியில், பல மாநில அதிகாரிகள் உதவியுடன், இளைஞர் ஒருவர் காரில் 2,300 கிலோ மீட்டர் பயணித்துள்ளார். இதற்கான காரணம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து நாடுகளும் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பஸ், ரயில், மெட்ரோ ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் தற்போது தங்களின் எல்லைகளை மூடியுள்ளன. மக்கள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், ஒருவர் சாலை மார்க்கமாக சுமார் 2,300 கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் உருக்கமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்த கதை அனிந்த்யா ராய் என்பவரை பற்றியது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. அவசியம் இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறி வாகனங்களில் வலம் வரும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலானோர் வீடுகளுக்கு உள்ளேயே உள்ளனர். அனிந்த்யா ராயும் கூட அப்படிப்பட்டவர்தான். அவர் தற்போதைய விதிமுறைகள் அனைத்தையும் மிக சரியாக பின்பற்றி வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பேரிடியான செய்தி ஒன்று வந்தது. ஆம், அவரது தந்தை மரணமடைந்து விட்டார். இந்த தகவலை செல்போன் மூலமாக அனிந்த்யா ராயுன் தாயின் தாய் தெரிவித்தார்.

அனிந்த்யா ராயின் தந்தை மேற்கு வங்கத்தில்தான் வசித்து வந்தார். அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். அவரின் மறைவு செய்தியை கேட்டு அனிந்த்யா ராய் மனம் நொறுங்கினார். மேற்கு வங்க சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கொள்ள வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால் விமானம், பஸ், ரயில் சேவைகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ள நேரம் இது.

எனவே எப்படி செல்வது? என புரியாமல் அவர் குழம்பினார். எனினும் இணையத்தில் இதற்கான தீர்வை அவர் தேடினார். இதன் மூலம் அவருக்கு வழி கிடைத்தது. ஆம், அனிந்த்யா ராய் பயணம் செய்வதற்கு மஹாராஷ்ரா போக்குவரத்து கமிஷனர் சிறப்பு பாஸ் வழங்கினார். தனது தந்தையின் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் சாஃப்ட் காப்பிகளை சமர்ப்பித்த பிறகு அவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

அரசு அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு அனுமதியை பெற்ற பின், அனிந்த்யா ராயும், அவரது நண்பர் ஒருவரும் பயணத்தை தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் சட்டீஸ்கரை சென்றடைந்தனர். ஆனால் அந்த எல்லையில் அவர்கள் நிறுத்தப்பட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கமிஷனரின் கடிதத்தை காட்டி நடந்த சம்பவங்களை அவர்கள் விவரித்தனர்.

இதனால் அங்கிருந்த அதிகாரிகளும் அவர்கள் கடந்து செல்ல அனுமதி வழங்கினர். இந்த பயணம் முழுவதும் அவர்கள் காருக்கு உள்ளேதான் தூங்கியுள்ளனர். ஏனெனில் ஊரடங்கு காரணமாக லாட்ஜ்கள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. அதேபோன்று உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பயணத்தை தொடங்கியபோது, காரில் ஏற்றிய உணவு மற்றும் தண்ணீரைதான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

தந்தை மறைவு செய்தியை கேட்டும் கூட அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று பயணம் செய்த அனிந்த்யா ராயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தற்போது உள்ள நெருக்கடியான சூழலிலும், அதிகாரிகள் அவரின் சூழ்நிலையை புரிந்து கொண்டு விரைவாக செயல்பட்டுள்ளனர். பல மாநில அதிகாரிகளிடம் இருந்து அனிந்த்யா ராய்க்கு உதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








