480 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டிய இளைஞர்... வீட்டிற்கு வந்ததும் நடந்த ஷாக் சம்பவம்... என்னனு தெரியுமா
இளைஞர் ஒருவர் 480 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி வீட்டிற்கு வந்த நிலையில், அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் (கோவிட்-19), உலகையே நிலைகுலைய வைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கோவிட்-19 வைரஸால் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. உலக வல்லரசான அமெரிக்காதான் இருப்பதிலேயே கடுமையான பாதிப்பை சந்தித்த நாடாக உள்ளது. இதுதவிர இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் என கடும் பாதிப்பை சந்தித்த நாடுகளின் பட்டியல் நீள்கிறது.

கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ், ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்து வருபவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கி கொண்டுள்ளனர்.

எனினும் கட்டாயமாக சொந்த ஊர் சென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருப்பவர்கள் கார், டூவீலர் போன்ற வாகனங்களில் ரிஸ்க் எடுத்து தொலைதூர பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் வாகனங்கள் இல்லாத ஒரு சிலரோ, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்து சொந்த ஊர் திரும்பிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்த வரிசையில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயை பார்ப்பதற்காக பெயிண்டர் ஒருவர் சுமார் 480 கிலோ மீட்டர்கள் சைக்கிள் ஓட்டி வந்தார். ஆனால் அவர் தனது தாயை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் நடைபெற்ற சம்பவம்தான் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரேவு ஸ்ரீனி. இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். ரேவு ஸ்ரீனியின் மனைவி லட்சுமியும் ஐதராபாத் நகரில்தான் உள்ளார். அதே சமயம் ரேவு ஸ்ரீனியின் தாய் மஹாலட்சுமி, ஏனாமில் வசித்து வந்தார்.

புற்று நோய் பாதிப்பு இருந்த சூழலில், மஹாலட்சுமியின் உடல் நிலை சமீபத்தில் மோசமானது. எனவே ரேவு ஸ்ரீனிக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். எனவே ஏனாம் சென்று தாயை பார்க்க வேண்டும் என ரேவு ஸ்ரீனி விரும்பினார். ஆனால் பஸ், ரயில் சேவைகள் இல்லாததால், என்ன செய்வது? என தெரியாமல் அவர் மனம் வருந்தினார்.

எனினும் சைக்கிள் மிதித்தாவது ஏனாம் சென்று தாயை பார்த்து விட வேண்டும் என அவர் முடிவு செய்தார்.இதன்படி ரேவு ஸ்ரீனியும், அவரது மனைவி லட்சுமியும் ஆளுக்கு ஒரு சைக்கிளில், கடந்த 14ம் தேதி தங்களது பயணத்தை தொடங்கினர். ஆனால் வழியில் பல இடங்களில் காவல் துறையினர் அவர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அவர்களிடம் தனது தாயின் உடல் நிலை குறித்து ரேவு ஸ்ரீனி எடுத்துரைத்துள்ளார். இதனால் மனம் கலங்கிய காவல் துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அத்துடன் வழியில் இருந்த கிராம மக்களும், அவர்கள் இருவருக்கும் தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.

ஒரு வழியாக சுமார் 480 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த பின், கடந்த 17ம் தேதி நள்ளிரவு அவர்கள் ஏனாம் வந்தடைந்தனர். ஆனால் ஏனாம் சென்றடைந்ததும், கொரோனா பரிசோதனைக்காக அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். எனினும் அதற்கு அடுத்த நாள், அதாவது 18ம் தேதி, தாயை பார்ப்பதற்கு ரேவு ஸ்ரீனிக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

உடனடியாக வீட்டிற்கு சென்ற ரேவு ஸ்ரீனி தனது தாயை பார்த்துள்ளார். ஆனால் மகனை பார்த்த அடுத்த சில நிமிடங்களில் மஹாலட்சுமி உயிரிழந்தார். இதனால் மனம் வருந்திய ரேவு ஸ்ரீனி, கலங்கிய மனதுடன் தாயின் இறுதி சடங்கை முடித்தார். பின்னர் தனது மனைவியுடன் மீண்டும் கொரோனா தனிமை முகாமிற்கு திரும்பி விட்டார்.

பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பிஹைன்ட்வுட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ரேவு ஸ்ரீனியை போலவே, இன்னும் பலர் பல்வேறு காரணங்களுக்காக சைக்கிளில் ரிஸ்க் எடுத்து பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








