உலகையே நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ்... இந்தியாவில் தலைகீழ் மாற்றம்... கொஞ்சம் அதிசயமாதான் இருக்கு...
கொரோனா வைரஸ் உலகையே நிலைகுலைய வைத்துள்ள நிலையில், இந்தியாவில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த இந்த வைரஸ், சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனாவிற்கு பின்னர் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில், கோவிட்-19 வைரஸ் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனவே காற்றின் தரம் மேம்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை 15.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 1.859 மில்லியன் டன்கள் பெட்ரோல் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 2.2 மில்லியன் டன்கள் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்தியாவில் அதிகம் நுகரப்படும் எரிபொருளான டீசல் விற்பனை 24.2 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 4.8 மில்லியன் டன்கள் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 6.34 மில்லியன் டன்கள் டீசல் விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஏவியேஷன் டர்பைன் ப்யூயலின் (Aviation Turbine Fuel - ATF) விற்பனையும் 31 சதவீதம் சரிந்துள்ளது. பேருந்து சேவைகளை போல, விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏவியேஷன் டர்பைன் ப்யூயலின் விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எரிபொருள் நுகர்வை பொறுத்தவரை நடப்பு ஏப்ரல் மாதமும் இதே நிலைதான் நிலவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில் ஏப்ரல் மாதத்தின் மத்திய பகுதி வரை (ஏப்ரல் 14) ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பின்பும் கூட, ஒரு சில கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் அறிகுறிகளும் தற்போது தென்பட்டு வருகின்றன. அதாவது படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே நடப்பு மாதமும் எரிபொருள் நுகர்வு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவிட்-19 வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில், அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டாலும் எடுக்கப்படலாம்.

ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் தற்போது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்களின் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து, பெட்ரோல், டீசல் விற்பனையும் சரிந்துள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசலை அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஆனால் ஊரடங்கு உத்தரவு எதிரொலியால், இந்தியாவில் தற்போது தலைகீழ் மாற்றமாக, பெட்ரோல், டீசல் நுகர்வு சரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மற்றொரு விஷயத்திலும் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் தற்போது வாகன போக்குவரத்து முடங்கியுள்ளதால், காற்றின் தரம் மேம்பட தொடங்கியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








