போலீஸ் மேல மரியாதை கூடுது... நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சாதாரண கான்ஸ்டபிள்... வேற லெவல் சம்பவம்
சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், வேற லெவல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸை (கோவிட்-19) எதிர்கொள்ள முடியாமல், மனித இனம் தற்போது தடுமாறி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளே நிலைகுலைந்து போயுள்ளன. கோவிட்-19 வைரஸால் உலகிலேயே மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான்.

அமெரிக்கா தவிர இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஈரான் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில், எப்படியாவது வென்று விட வேண்டும் என அரசு இயந்திரம் முழு வீச்சில் களமிறங்கி பணியாற்றி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வீடுகளில் இருந்து தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல் ஒரு சிலர் வாகனங்களில் வெளியே சுற்றி கொண்டுள்ளனர்.

இவ்வாறு தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. அதேசமயம் டயாலிசிஸ் போன்ற மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருபவர்களிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகின்றன.

இதனால் கள நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக உயர் அதிகாரிகள் அவ்வப்போது திடீர் சோதனைகளை செய்து வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்கின்றனர்? என்பதை அறிந்து கொள்வது, இந்த சோதனைகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சோதனைக்கு செல்லும்போது உயர் அதிகாரிகள் அரசாங்க வாகனத்தை பயன்படுத்துவதில்லை.

காவல் துறையினர் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, தங்களது சொந்த வாகனங்கள் (அ) வாடகை வாகனங்களை உயர் அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். காவல் துறையினரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்பதை கண்காணிக்கும் அதே நேரத்தில், ஊரடங்கு விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் இந்த சோதனையின்போது அதிகாரிகள் கவனிக்கின்றனர்.

இந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் திடீர் சோதனைக்கு சென்ற உயர் அதிகாரி ஒருவரை, சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்காக அந்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த ருசிகரமான இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவத்தன்று ஒரு காரில் டிரைவர் உள்பட 3 பேர் வந்து கொண்டிருந்தனர். ஆனால் சமூக விலகல் விதிகளை மீறிய காரணத்திற்காக, போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அந்த காரை நிறுத்தினார். இதன்பின் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்த பிறகே, அவர்களை அங்கிருந்து செல்ல அந்த கான்ஸ்டபிள் அனுமதித்தார். அத்துடன் விதிமுறைகள் குறித்தும் அவர்களுக்கு பக்குவமாக எடுத்துரைத்தார்.

அந்த கான்ஸ்டபிளின் பெயர் அருண் குமார். ஆனால் காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்தது வருவாய் கோட்டாச்சியர் ரவீந்திர குமார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. உயர் அதிகாரியான ரவீந்திர குமார் திடீர் சோதனையில் ஈடுபட்டபோதுதான் இந்த சம்பவம் நடைபெற்றது. கான்ஸ்டபிளின் இந்த செயல்பாடுகளால், வருவாய் கோட்டாச்சியர் மனம் நெகிழ்ந்தார்.

எனவே அடுத்த ஒரு சில மணி நேரத்தில், கான்ஸ்டபிள் அருண் குமாருக்கு அவர் பாராட்டு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதே சமயம் எஸ்எஸ்பி-யிடம் (Senior Superintendent Of Police) இருந்து 2,000 ரூபாய் அவருக்கு வெகுமதியாக வழங்கப்பட்டது. வருவாய் கோட்டாச்சியர் உள்ளே அமர்ந்துள்ளார் என்பதை அறியாத கான்ஸ்டபிள் அருண் குமார் அந்த காரின் டிரைவரை ஓரங்கட்ட சொல்லியுள்ளார்.

இதன்பின்பு எதற்காக வெளியே வந்துள்ளீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் கடும் எச்சரிக்கைகளை விடுத்த பின்புதான், அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தார். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தீவிரமாக முயன்று கொண்டுள்ளோம்.

இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் கான்ஸ்டபிள் அருண் குமார் தனது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வரும செய்தி மகிழ்ச்சியளிக்கிறது' என்றனர். பொதுவாக போலீஸ் என்றாலே, மக்களுக்கு அதிருப்திதான் ஏற்படும். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த, உயிரை பணயம் வைத்து அவர்கள் களப்பணியாற்றி வருகின்றனர். எனவே மக்கள் மத்தியில், போலீஸ் மீதான மரியாதை தற்போது அதிகரித்துள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








