நல்ல மனுஷன்யா... சொந்த ஊர் செல்ல சைக்கிளை திருடிய தொழிலாளி... மனசு கேட்காமல் என்ன செய்தார் தெரியுமா?
சொந்த ஊர் செல்வதற்காக ஒரு வீட்டில் இருந்து சைக்கிளை திருடிய தொழிலாளி, மனசு கேட்காமல் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிராமங்களில் வசிக்கும் மக்கள் நகரங்களுக்கு படையெடுக்கும் நிகழ்வுகளைதான் நாம் இதுவரை பார்த்து வந்துள்ளோம். ஆனால் கொரோனா வைரஸ் நம் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. இதன் காரணமாக நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் முதல் முறையாக பல வித்தியாசமான நிகழ்வுகளை பார்த்து வருகிறோம்.

நகரங்களில் வசிக்கும் மக்கள் கிராமங்களை நோக்கி படையெடுப்பதும் அதில் ஒன்று. நகரங்களுக்கு வேலை தேடி சென்ற பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தற்போது கூட்டம் கூட்டமாக தங்களது சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு, தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் வேலையை பறித்துள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், ஹோட்டல், பேக்கரி மற்றும் டீ கடை உள்ளிட்ட இடங்களில் வேலை செய்தவர்கள் என பலரின் வேலையை கொரோனா வைரஸ் பறித்துள்ளது. இதனால் சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

எனினும் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதி முதலே பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டது. பஸ், ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்தின் சேவையும் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தை ஒரு சிலர் சைக்கிள் மூலம் கடந்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகனங்களை இயக்குவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதி பெற்றால் மட்டும்தான், கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்க முடியும். இல்லாவிட்டால் அத்தகைய வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்கின்றனர்.

ஆனால் ஏழை கூழி தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. அவர்களிடம் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்கள் எதுவும் இல்லாததால், நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோதான் சொந்த ஊர் சென்றாக வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் சைக்கிளும் கூட இல்லாத கூலி தொழிலாளி ஒருவர், சொந்த ஊர் செல்வதற்காக செய்த காரியம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தவர் முகமது இக்பால். உத்தர பிரதேச மாநிலம் பரேலிதான் அவரது சொந்த ஊர். ஆனால் ஊரடங்கு காரணமாக பரத்பூரில் அவர் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் சொந்த ஊரான பரேலிக்கே சென்று விடுவது என அவர் முடிவெடுத்தார். எனினும் அவரிடம் சொந்த வாகனம் இல்லை என கூறப்படுகிறது.

எனவே பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ரராஹ் என்னும் கிராமத்தில் இருக்கும் சஹாப் சிங் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை திருடி கொண்டு, தனது மகனுடன் சொந்த ஊரான பரேலி நோக்கி முகமது இக்பால் புறப்பட்டு விட்டார். பரத்பூரில் இருந்து அவரது சொந்த ஊர் சுமார் 250 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று உள்ளது. முகமது இக்பால் சைக்கிளை திருடியிருந்தாலும் கூட, அதற்காக மன்னிப்பு கடிதத்தை எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு: நான் குற்றம் செய்து விட்டேன். ஆனால் நான் ஒரு சாதாரண கூலி தொழிலாளி மற்றும் நான் உதவியில்லாமல் நிற்கிறேன்.

நான் உங்கள் சைக்கிளை எடுத்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். சொந்த ஊர் செல்ல எனக்கு வேறு வழியில்லை. மேலும் எனக்கு மாற்று திறன் கொண்ட குழந்தை உள்ளது. நான் பரேலிக்கு சென்றாக வேண்டும். இவ்வாறு முகமது இக்பால் தனது மன்னிப்பு கடிதத்தில் கூறியுள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் கவலைப்பட வைத்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தொழிலாளர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல் தினமும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று கொண்டுள்ளன. ஊரடங்கால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில், வெளி மாநில தொழிலாளர்கள் முக்கியமானவர்கள்.

ஆனால் வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தற்போது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்படி அவர்களுக்கென சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற முடியாதவர்கள் இன்னமும் சைக்கிள் மூலமாகவோ அல்லது பொடி நடையாக நடந்தேவோ சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டுதான் உள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








