வெறிச்சோடி கிடந்த சாலைகள்... உயிரை காப்பாற்ற சென்ற டாக்டர்களுக்கு நேர்ந்த கதி... என்னனு தெரியுமா?
இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்த முதல் 40 நாட்களில் நடைபெற்ற துயர சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுத்து வரும் நாடுகளில் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்க தீவிரமாக முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

இப்படி சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு காலகட்டத்தில் நடைபெற்ற விபத்துக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), இந்தியாவில் பரவுவதை தடுப்பதற்காக தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின்பும் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த 2 கட்ட ஊரடங்கின்போது நடைபெற்ற சாலை விபத்துக்கள் பற்றிய புள்ளி விபரங்களை, சேஃவ் லைஃப் பவுண்டேஷன் (Savelife Foundation) தொகுத்துள்ளது.

இதன்படி மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரையிலான கால கட்டத்தில், இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதாவது தற்போதைய ஊரடங்கின் முதல் 40 நாட்களில், 600க்கும் அதிகமான சாலை விபத்துக்களை இந்தியா சந்தித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 30 சதவீதம் பேர் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தவர்கள் ஆவர்.

ஊரடங்கின்போது நடைபெற்ற இந்த சாலை விபத்துக்களில், 57 சதவீதம் பேரின் உயிரிழப்பிற்கு அதிவேகமே முக்கிய காரணமாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெறுவதற்கு, வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் செல்வதுதான் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஊரடங்கின் முதல் இரண்டு கட்டங்களின்போது, பஸ், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதுதவிர தனியார் கார், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலைக்கு வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சரியான காரணமின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திய சாலைகள், முதல் இரண்டு கட்ட ஊரடங்கின் போது வெறிச்சோடி காணப்பட்டன. இது வாகனங்கள் இன்னும் அதிவேகத்தில் பயணிப்பதற்கு ஏதுவாக அமைந்து விட்டது. இதன் காரணமாகதான் அதிவேகம் காரணமாக அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்க கூடும்.

இந்தியாவில் சுமாராக கடந்த 5 வார கால அளவில், 140 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதில், டெல்லி, மஹாராஷ்டிரா, குஜராத், அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் தமிழ் நாடு ஆகிய 9 மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 100 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கின் போது நடைபெற்ற சாலை விபத்துக்களில், சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்த பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு சென்று கொண்டிருந்த (அ) வேலை முடிந்து வந்து கொண்டிருந்த அத்தியாவசிய பணியாளர்கள் சாலை விபத்துக்களால் பாதிப்படைந்திருக்கின்றனர்.

இந்தியாவில் ஊரடங்கு காலகட்டத்தின்போதே இந்த அளவிற்கு சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டு நிலைமை சீராகும்போது, மீண்டும் அதிக அளவிலான விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மனது வைத்தால் இதனை தவிர்க்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணியுங்கள். கார்களில் செல்லும்போது, கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள். இதேபோல் மற்ற போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் சரியாக பின்பற்றுங்கள். இதன்மூலம் விபத்துகளில் உயிரிழக்கும் வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதே சமயம் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, பழுதான சாலைகளை சரி செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும், முழுமையான விலக்கு வழங்கப்படவில்லை.

எனவே வாகன போக்குவரத்து குறைவாகதான் உள்ளது. இந்த சமயத்தில் பழுதான சாலைகளை சரி செய்து கொண்டால், ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்ட பிறகு, விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மோசமான சாலைகளும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








