பாவம்யா அவங்க... இடம்பெயரும் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு சைக்கிள் வாங்க தமிழகத்தில் தந்திரம்...
இடம்பெயரும் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு சைக்கிள் வாங்குவதற்காக, சிலர் செய்து வரும் தந்திரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் (கோவிட்-19) நம் அனைவரின் வாழ்க்கையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்திருப்பது என்னவோ வெளிமாநிலங்களில் பணியாற்றும் சாதாரண கூலி தொழிலாளர்கள்தான்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வரை ஊரடங்கு நீடித்து வருகிறது. ஊரடங்கு அமலுக்கு வந்த உடனேயே பஸ், ரயில், விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

பொது போக்குவரத்து முடங்கியதால், வெளிமாநில தொழிலாளர்களால் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியவில்லை. ஊரடங்கால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மேலும் உணவு, இருப்பிடம் போன்ற வசதிகள் எதுவும் கிடைக்காத நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சொந்த ஊர் திரும்புவது ஒன்றுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியாக உள்ளது.

ஆனால் பொது போக்குவரத்து இல்லாததால், சில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து வருகின்றனர். இன்னும் சிலரோ, சைக்கிள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். சுட்டெரிக்கும் கோடை வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்படி நடந்தும், சைக்கிளிலும் பயணம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு சிலர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி சோதனை மேல் சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஏமாற்றவும் ஒரு கும்பல் களத்தில் இறங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதுவும் நம் தமிழகத்தில் என்பது வேதனையான விஷயம். சென்னை, திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை ஒரு கும்பல் நிறுத்துகிறது. அவர்களிடம் அந்த கும்பல் பேசும் வசனம் இதுதான். ''அரே பையா, சைக்கிள் ₹3,000 கெலியே பேக் தோ. அகே ஜகோ தோ போலீஸ் சீஸ் கர்டாகே''

''நண்பா சைக்கிளை விற்பனை செய்து விடு. நீங்கள் முன்னோக்கி பயணம் செய்தால் காவல் துறை உங்கள் சைக்கிளை பறிமுதல் செய்து விடும்'' இதுதான் அதன் அர்த்தம். அந்த கும்பலின் நோக்கம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவுவது அல்ல. வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு சைக்கிளை வாங்குவதுதான் அவர்களின் குறிக்கோள்.

போலீஸ் உங்கள் சைக்கிளை பறிமுதல் செய்து விட்டு, உங்களை அனுப்பி விடுவார்கள் என்று அவர்களை நம்ப வைத்து புத்தம் புதிய சைக்கிளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கு ஒரு சிலர் முயல்கின்றனர். உண்மையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தற்போது புத்தம் புதிய சைக்கிள்களை வாங்கி கொண்டுள்ளனர்.

பொது போக்குவரத்து சீராகத நிலையில், சைக்கிள் ஒன்றுதான் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப ஒரே ஒரு வழியாக உள்ளது. அரசு சிறப்பு ரயில்களை இயக்கினாலும், அதில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்காத தொழிலாளர்கள் சைக்கிள் மூலம் செல்கின்றனர். இதற்காக தாங்கள் வைத்திருந்த மொத்த பணத்தையும் செலவு செய்து சைக்கிளை வாங்குகின்றனர்.

அதையும் குறைந்த விலைக்கு ஒரு சிலர் அபகரிக்க முயல்வது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி என்னும் கிராமத்தில் இப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு ஒரு கும்பல் சைக்கிளை விலை பேசியுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் மகட்டோ என்ற வெளிமாநில தொழிலாளர் கூறுகையில், ''சொந்த ஊருக்கு சென்று விட முடியும் என்ற நம்பிக்கையுடன் 5 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிள் வாங்கினோம். ஆனால் ஒரு நபர் எங்களை நிறுத்தி, 3 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிளை விற்பனை செய்து விடும்படி தெரிவித்தார். சோழவரம் எஸ்ஐ எங்கள் சைக்கிள்களை பறிமுதல் செய்ய வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே அவர் வருவதற்கு முன்னால் சைக்கிள்களை விற்பனை செய்து விடுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்'' என்றார். தேவை இல்லாமல் வலம் வரும் வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்து கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஊரடங்கு அமலில் இருப்பதால், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வரக்கூடாது என காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆனாலும் கூட ஒரு சிலர் ஜாலியாக ஊர் சுற்றி கொண்டுள்ளனர். அப்படி உரிய காரணம் இல்லாமல் வெளியே கொண்டு வரப்பட்ட 4 லட்சத்திற்கம் மேற்பட்ட வாகனங்களை தமிழக காவல் துறை பறிமுதல் செய்துள்ளது. நாடு முழுக்க இதேபோல் பல லட்சக்கணக்கான டூவீலர், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வெளிமாநில தொழிலாளர்களின் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக எங்கும் தகவல் இல்லை.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தொழிலார்களை மீட்டது. இதன்பின் பாடியநல்லூரில் உள்ள உறைவிடத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்'' என்றார். இதுகுறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள பொன்னேரி ஏஎஸ்பி பவன் குமார் ரெட்டி, சைக்கிளை தங்களுடன் எடுத்து செல்ல தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''இடம்பெயரும் தொழிலாளர்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நெடுஞ்சாலைகளில் போலீஸ் குழு ரோந்து செல்லும்'' என்றார்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








