கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி... தெலங்கானாவில் எடுக்கப்பட்ட சூப்பர் நடவடிக்கை... என்ன தெரியுமா?
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, தெலங்கானா மாநிலத்தில் அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் தற்போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முதற்கட்ட ஊரடங்கு, அதன் பின் மே 3ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராததால், வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகம் இதற்கு ஒரு உதாரணம். எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும் என அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

தவிர்க்க முடியாத காரணங்கள் எதுவும் இல்லாத வரை, தேவை இல்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என அதிகாரிகளும் மக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்தது முதலே தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்களை நம்மால் பார்க்க முடிந்தது. அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அந்தந்த மாநில போலீசார் சார்பில், இப்படிப்பட்ட வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக, தெலங்கானா மாநில போலீசார் தற்போது வரை 1.2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்திருக்கின்றனர்.

தெலங்கானா போலீசார் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து தற்போது வரை சுமார் 1.2 லட்சம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதில், 1.1 லட்சம் வாகனங்கள் டூவீலர்கள் (பைக்குகள்) ஆகும். இதுதவிர 4,881 மூன்று சக்கர வாகனங்களும், 3,390 கார்களும், 539 மற்ற வாகனங்களும் தெலங்கனா காவல் துறையினரால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெலங்கானா போலீசார் சாலைகளில் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். சரியான காரணமின்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தெலங்கான காவல் துறையினர் அனைத்து வாகனங்களையும் பரிசோதிக்கின்றனர். தன்னார்வலர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதிக்கப்படுகிறது.

அத்துடன் மளிகை பொருட்களை வாங்குவதற்காக வாகனங்களில் வெளியே வருபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தெலங்கானா போலீசார் தற்போது நகரங்களில் கூடுதல் செக் போஸ்ட்களை அமைத்துள்ளனர். சாலைகளில் வாகனங்கள் தேவை இல்லாமல் இயங்குவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''உண்மையான காரணம் எதுவும் இல்லாமல், தேவையின்றி வெளியே வருபவர்கள் அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் கோர்ட்டில் சரண்டர் செய்யப்படும்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகுதான் வாகனங்கள் திருப்பி வழங்கப்படும்'' என்றனர். அத்துடன் கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று மட்டும், சுமார் 7,000 டூவீலர்களும், 181 மூன்று சக்கர வாகனங்களும், 290 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதர வகையை சேர்ந்த 5 வாகனங்களும் அன்றைய தினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெலங்கானா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக காவல் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. குறிப்பாக தேவை இல்லாமல் சுற்றும் வாகனங்களை தடுக்க தமிழக போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வாகனங்களில் பெயிண்ட் அடிக்கும் தனித்துவமான திட்டத்தை தமிழக போலீசார் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு முன்பு தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு கோவிட்-19 வைரஸ் விழிப்புணர்வு தேர்வை நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக காவல் துறையினர் எடுத்தனர்.

வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தற்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே தற்போது சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் பொருளாதார நிலைமை சீர்செய்யவே அரசு ஊரடங்கில் தளர்வு வழங்கியுள்ளது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே முடிந்த வரை வெளியே செல்வதை தவிர்த்து விடுங்கள். முக்கியமாக தேவை இல்லாமல் வாகனத்தில் வெளியே சுற்றுவதை தவிர்த்து விடுங்கள். ஊரடங்கில் தளர்வு இருந்தாலும், தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் முன்பு போலவே தொடரும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








