கைவிட்ட 108 ஆம்புலன்ஸ்... பல உயிர்களை காப்பாற்றி சூப்பர் ஹீரோவாக மாறிய இளைஞர்... நாடே பாராட்டுகிறது
108 ஆம்புலன்ஸ்கள் கைவிட்ட நிலையில், பல உயிர்களை காப்பாற்றி இளைஞர் ஒருவர் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 தற்போது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான வுஹானில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸிடம் இருந்து தப்பவில்லை.

இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 21 நாட்கள் ஊரடங்கை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் பஸ் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இளைஞர் ஒருவர் உதவி செய்து வருகிறார்.

மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட இளைஞர் தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றம் செய்து, நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று வருகிறார். அந்த இளைஞரின் பெயர் கணேஷ் பாட். இந்த ஊரடங்கு காலத்தில், பல உயிர்களை கணேஷ் பாட் காப்பாற்றியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் இருக்கும் தேவ்பிரயாக் பகுதியை சேர்ந்த கணேஷ் பாட்டிற்கு தற்போது 32 வயதாகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது முதலே இவர் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். உத்தரகாண்ட்டில் தற்போது 108 சேவை சில சமயங்களில் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை.

இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல கணேஷ் பாட் தனது காரை ஆம்புலன்ஸாக பயன்படுத்தி வருகிறார். இதுகுறித்து கணேஷ் பாட் கூறுகையில், ''108 சேவை உரிய நேரத்தில் கிடைக்காமல் போவதால், பல பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பமாக உள்ள பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் உள்ள முதியவர்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். எனவே அவர்களுக்கு நான் உதவி வருகிறேன்'' என்றார். 108 நம்பருக்கு போன் செய்தால், ஆம்புலன்ஸ் இல்லை என சொல்வதாக கூறப்படுகிறது. அல்லது வெகு தொலைவில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக நோயாளிகளின் இருப்பிடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வெகு நேரமாகிறது.

எனவேதான் தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றும் எண்ணம் கணேஷ் பாட்டிற்கு ஏற்பட்டது. சாராசரியாக ஒரு நாளைக்கு நான்கு அவசர அழைப்புகள் கணேஷ் பாட்டிற்கு வருகின்றன. தற்போது வரை 20க்கும் மேற்பட்டோருக்கு அவர் உதவி செய்துள்ளார். கணேஷ் பாட் தனது நீல நிற டாடா நானோ காரை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார்.

இந்த காரின் முன் மற்றும் பின் பக்க விண்டுஷீல்டில் தனது தொடர்பு எண்களையும் கணேஷ் பாட் பிரிண்ட் செய்து ஒட்டியுள்ளார். எப்போது அழைத்தாலும் கணேஷ் பாட்டின் ஆம்புலன்ஸ் கார் உடனே உதவிக்கு வருகிறது. கடந்த மார்ச் 21ம் தேதியன்று கணேஷ் பாட் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதில், தனது தொடர்பு எண்களையும் தெரிவித்த அவர், மருத்துவ உதவி தேவைப்பட்டால் உடனே தன்னை அணுகும்படி பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி எனக்கு முதல் அழைப்பு வந்தது. அதன்பின் கை உடைந்த ஒரு சிறுவனை மருத்துவமனைக்கு கூட்டி செல்லுமாறு அழைப்பு வந்தது'' என்றார்.

இதேபோல் தொடர்ச்சியாக பலருக்கும் கணேஷ் பாட் உதவி செய்து வருகிறார். காரை ஆம்புலன்ஸாக மாற்றி அவசர காலத்தில் நோயாளிகளுக்கு உதவி செய்து வரும் கணேஷ் பாட்டின் இந்த சேவைக்கு, நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








