கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிரடி... ரகசியமாக உத்தரவு போட்ட தமிழக அரசு... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) என்ற கண்ணுக்கே தெரியாத எதிரி, தற்போது மனித குலத்திற்கே பெரும் சவாலாக மாறியுள்ளது. கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த முடியாமல், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் திணறி வருகின்றன. கோவிட்-19 வைரஸை எதிர்க்க அதிகாரப்பூர்வமான தடுப்பூசிகளோ அல்லது மருந்தோ தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று ஊரடங்கு விலக்கப்படவில்லை.

அதற்கு மாறாக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தேவை இல்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் இருந்தால் மட்டுமே வெளியே வர முடியும். கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போதைக்கு இதுதான் சிறப்பான வழியாக கருதப்படுகிறது.

ஆனால் அரசு விடுத்த எச்சரிக்கையை மீறி வாகனங்களில் பலர் வெளியே சுற்றி வந்தனர். எனவே அத்தகைய நபர்களை கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பத்தில் காவல் துறையினர் தடியடி நடத்தினர். அதன்பின் தடியடி நடத்துவதை காவல் துறையினர் நிறுத்தி கொண்டாலும், வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனைகளை கொடுக்க தொடங்கினர்.

தோப்பு கரணம் போட சொல்வது, கோவிட்-19 விழிப்புணர்வு தேர்வை நடத்துவது, தேவையில்லாமல் வெளியே வர மாட்டோம் என உறுதி மொழி எடுத்து கொள்ள வைப்பது போன்ற நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொண்டது. எனினும் பெரும்பாலானோர் வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றி கொண்டுதான் இருந்தனர்.

இதனால் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்வது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் காவல் துறையினர் இறங்கினர். குறிப்பாக தமிழகத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது.

எனவேதான் ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்க வைக்க வாகன ஓட்டிகள் மீது இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வலம் வந்த 2 லட்சத்து 11,467 வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வரையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையாகும்.

தமிழகத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஒரு சில வாகன ஓட்டிகள் பொறுப்பற்ற முறையில், தேவையே இல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருப்பது காவல் துறையினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் அவர்கள் மீதான பிடி இறுகவுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை (ஏப்ரல் 22 மாலை வரை), மொத்தம் 1,629 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அளவில் பார்த்தால், தலைநகர் சென்னைதான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது வரை 373 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இனி வருகின்ற நாட்களில், சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல் துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக அரசின் உத்தரவையடுத்து, தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுவோரை கட்டுப்படுத்த, சென்னை மாநகரம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல் துறை முடிவு செய்துள்ளது. அத்துடன் அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதவிர சென்னை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அத்தியாவசிய தேவைகள் இருக்கும் பட்சத்தில், இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம் என காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த உத்தரவை காதில் போட்டு கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

எனவே ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தால், உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்யும்படியும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் அதிரடி உத்தரவு எதிரொலியால், தேவை இல்லாமல் வெளியே சுற்றுபவர்களிடம் இனிமேல் காவல் துறையினர் கடுமை காட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








