மத்த சிஎம் மாதிரி இல்ல... காரை எடுத்து கொண்டு மம்தா செய்த காரியம்... எப்பவும் அவங்க ஸ்டைலே வேற...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்துள்ள காரியம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ் (கோவிட்-19), மனித குலத்திற்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ள முடியாமல், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நன்கு வளர்ச்சியடைந்த நாடுகள் சரணடைந்துள்ளன.

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது, உலக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தியாவில் முதலில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், வரும் மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவுவதை தடுக்க, ஊரடங்கு உத்தரவு ஒன்றுதான் தற்போது இருக்கும் ஒரே வழியாக பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் பலர் வெளியே சுற்றி கொண்டுள்ளனர். அத்தகைய நபர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் தவிர கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநில காவல் துறையினரும், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களை வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வைக்க முடியும் என காவல் துறையினர் நம்புகின்றனர்.

மக்களை வீடுகளுக்குள் இருக்க வைக்க இப்படி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளார். பெரும்பாலான மாநில முதல்வர்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மூலமாகவே, மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மம்தா பானர்ஜி கொஞ்சம் வித்தியாசமாக நேரடியாக களத்திற்கு வந்து, மக்களை சந்தித்து இதனை வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்ற மம்தா பானர்ஜி, லாக்டவுன் சமயத்தில் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ காரை அவர் பயன்படுத்தியுள்ளார். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கார்பியோ காரில் சென்று, பொதுமக்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
கொல்கத்தா மாநகரில் மிகவும் பிரபலமான பகுதிகளில் ஒன்றாக விளங்கும் பார்க் சர்க்கஸ் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. மக்களிடையே பேசுவதற்காக, மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டாப்பில் பொருத்தப்பட்டிருக்கும் பொது அறிவிப்பு அமைப்பை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பயன்படுத்துவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

கொல்கத்தா மக்களுக்கு ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய இரு மொழிகளில் மம்தா பானர்ஜி தனது மெசேஜை கூறியுள்ளார். அவர் பேசியதன் சுருக்கம் பின்வருமாறு: இந்த தொற்று பரவுவதை தடுக்க இதுதான் ஒரே வழி என்பதால், தயவுசெய்து வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு எனது சகோதர, சகோதரிகளை கேட்டு கொள்கிறேன்.

நாம் இதற்கு முன்பாக இப்படி ஒரு லாக்டவுனை பார்த்தில்லை. ஆனால் இந்த நோய்க்கு எதிராக போராட இது தேவையான ஒன்று. நீங்கள் ஏதாவது பிரச்னைகளை எதிர்கொண்டால், அதுபற்றி காவல் துறையினருக்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார். கொல்கத்தா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் இந்த மெசேஜை கொடுத்தார்.

பார்க் சர்க்கஸ், டாப்சியா மற்றும் ராஜா பஜார் ஆகியவை அவர் விசிட் அடித்த முக்கியமான பகுதிகள் ஆகும். பொதுவாக காவல் துறையினரோ அல்லது அரசு ஊழியர்களோதான் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட செல்வார்கள். ஆனால் அதற்கு மாறாக, ஒரு மாநிலத்தின் முதல்வரே பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதன்மூலம் மக்கள் ஊரடங்கை முறையாக பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது கோவிட்-19 வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்திலும் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மம்தா பானர்ஜி பயணித்த காரை டிரைவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். ஆனால் அவருடன் வேறு யாராவது அந்த காரில் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








