சூப்பர்... உயிர் காக்கும் கருவிகளை தயாரித்த மாருதி சுஸுகி... வெறும் இருபதே நாட்களில் தரமான சம்பவம்
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவைப்படும் உயிர் காக்கும் கருவிகளை மாருதி சுஸுகி நிறுவனம் தயாரித்துள்ளது.

கொரோனா வைரஸை (கோவிட்-19) சமாளிக்க முடியாமல், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கடுமையாக திணறி வருகின்றன. சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸ் கொத்து கொத்தாக மனித உயிர்களை பறித்து வருவதுடன், சர்வதேச பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், கார் உள்பட பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் கவனத்தை மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதில் திருப்பியுள்ளன.

கோவிட்-19 வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால், வென்டிலேட்டர்கள் மற்றும் மாஸ்க் போன்ற மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. எனவே அவற்றை உற்பத்தி செய்து தரும்படி பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. இதன்பேரில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளன.

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களான டெஸ்லா, ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. கோவிட்-19 வைரஸானது, நோயாளிகளின் சுவாச மண்டலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே வென்டிலேட்டர்களின் தேவை அதிகமாக உள்ளது.

இந்தியாவை பொறுத்த வரையில், நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் வென்டிலேட்டர்களின் தயாரிப்பில் களமிறங்கியுள்ளன. இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி, ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று கொண்ட மாருதி சுஸுகி நிறுவனம் வென்டிலேட்டர் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதற்காக அக்வா ஹெல்த்கேர் (AgVa Healthcare) என்ற முன்னணி நிறுவனத்துடன் மாருதி சுஸுகி கூட்டணி அமைத்துள்ளது.

அக்வா ஹெல்த்கேர் என்பது தற்போது இருக்கும் அனுமதி பெற்ற வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனம் ஆகும். வென்டிலேட்டர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அக்வா ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுஸுகி நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்த சூழலில் தற்போது 1,500க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை மாருதி சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

இந்த 1,500 யூனிட்களையும் வெறும் 20 நாட்களில் மாருதி சுஸுகி தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவற்றை அனுப்புவதற்காக, அரசின் அனுமதியை எதிர்பார்த்து மாருதி சுஸுகி நிறுவனம் காத்து கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








