கொரோனா பரவுவதை தடுக்க சூப்பர் ஐடியா... வேற லெவலில் யோசித்த சாதாரண பால்காரர்... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, சாதாரண பால்காரர் ஒருவர், சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

கொரோனா வைரஸின் (கோவிட்-19) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா, ஈரான் என உலகின் பல்வேறு நாடுகளை கோவிட்-19 வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளது. மேற்கண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.

எனவே மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு, வரும் மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், சோசியல் டிஸ்டன்ஸ் எனப்படும் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியமாக உள்ளது.

எனினும் பஸ், ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக இடைவெளியை எந்த அளவிற்கு கடைபிடிக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது. எனவே ஊரடங்கு முழுவதும் தளர்த்தப்பட்ட பின்பு, பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய மக்கள் மத்தியில் அச்சம் உருவாகும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

அதற்கு பதில் சொந்த கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களில் பயணம் செய்வதற்குதான் பொதுமக்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனைவராலும் சொந்தமாக கார்கள் வாங்கி பயணிக்க முடியாது.

டாக்ஸி மற்றும் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. எனவே டாக்ஸி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் சிலர், தங்கள் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சமூக விலகலை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், அதிரடியாக சில மாடிபிகேஷன்களை செய்து அசத்தியுள்ளனர்.

இதன்படி அமெரிக்காவை சேர்ந்த கேப் டிரைவர் ஒருவர், பிளாஸ்டிக் கவர் உதவியுடன் தனது காரில் தனியாக ஒரு கம்பார்ட்மெண்ட்டை ஏற்படுத்தியுள்ளார். அவரது இருக்கையை சுற்றி பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு, இந்த கம்பார்ட்மெண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளிடம் இருந்து அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்.

அமெரிக்கர்கள் இப்படி யோசித்தால் இந்தியர்கள் சும்மா இருப்பார்களா என்ன? சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், இந்தியாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சமீபத்தில் அசத்தலான மாடிபிகேஷன் ஒன்றை செய்தார். இதன்படி அவரது ஆட்டோ 4 சிறு சிறு கேபின்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கேபினிலும் ஒரு பயணி அமர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலமாக பயணிகளுக்கு இடையே சமூக விலகல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்டோ டிரைவர் வரிசையில், பால்காரர் ஒருவரும் தற்போது வேற லெவலில் யோசித்துள்ளார். சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக, அவர் தனது பைக்கில் செய்துள்ள ஒரு காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சம்பந்தப்பட்ட பால்காரர் பைக்கில் வீடு வீடாக சென்று பால் விற்பனை செய்து கொண்டுள்ளார். இதன்மூலம் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக, புதிய ஐடியா ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதன்படி தனது பைக்கில் பைப் ஒன்றை அவர் கட்டியுள்ளார். அந்த பைப்பில் புனலை பொருத்தி, அதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பால் ஊற்றுகிறார்.

வாடிக்கையாளர்கள் பைப்பின் மறுபக்கத்தில் நின்று பாத்திரத்தில் பாலை பெற்று கொள்ளலாம். இதன்மூலம் பால் விற்பனையின்போது சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவி கொண்டுள்ளது. தன்னை தானே பாதுகாத்து கொள்வதுடன், மற்றவர்களையும் பாதுகாக்கும் இந்த பால்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தற்போதைய சூழலில் சமூக விலகல்தான் நம் அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. அதை உறுதி செய்யும் இந்த பால்காரரின் ஐடியா பாராட்டத்தக்கதுதான். பொதுவாக பால்காரர்கள் பலர் பைக் அல்லது சைக்கிள் மூலம்தான், வீடு வீடாக சென்று வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களும் இந்த ஐடியாவை பின்பற்றலாம்.

இந்த ஐடியாவை பின்பற்றுவது கடினமும் இல்லை. உங்கள் பைக் அல்லது சைக்கிளில் பைப் ஒன்றை கட்டி அதன் மூலமாக பாலை விற்பனை செய்யலாம். இந்த ஐடியாவை கண்டுபிடித்துள்ள பால்காரர் க்ளவுஸ் அணிந்திருப்பதையும் நம்மால் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. இதுவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications








