கொரோனா வைரஸ் பரவாது... மும்பையை கலக்கும் ஆட்டோக்களில் அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி... என்னனு தெரியுமா?
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, மும்பை ஆட்டோ டிரைவர்கள் சூப்பரான வழி ஒன்றை பின்பற்றி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. லாக்டவுன் அமலுக்கு வந்த மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினம் முதல் பஸ், ரயில், விமானம், ஆட்டோ மற்றும் டாக்ஸி என எந்தவித பொது போக்குவரத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதற்கும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் ஊரடங்கில் தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக பொது போக்குவரத்து வாகனங்களை மீண்டும் இயக்குவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ரயில், விமானங்கள் இயங்குவதுடன், ஆட்டோ, டாக்ஸிகளை இயக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பாக கருதுகின்றனர். இதன் காரணமாக ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்கள்தான் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமலுக்கு வந்தது முதலே அவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டாலும், பயணிகள் வராததால், அவர்களுக்கு வருமானம் இல்லை. ஆனால் இந்த பிரச்னைக்கு மும்பை ஆட்டோ டிரைவர்கள் வேறு விதமான தீர்வு ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மஹாராஷ்டிரா மாநிலம்தான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.

அந்த மாநிலத்தின் தலைநகர் மும்பைதான் கொரோனா வைரஸ் பரவலின் ஹாட்-ஸ்பாட்டாக மாறியுள்ளது. ஆனால் அங்கும் தற்போது பொது போக்குவரத்து வாகனங்களுக்கு, மக்களின் பயணங்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி டாக்ஸி/கேப் என்றால், அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு டிரைவர், 2 பயணிகளுடன் இயங்கலாம்.

இரு சக்கர வாகனம் என்றால், அத்தியாவசிய பணிகளுக்காக ஒருவர் மட்டும் பயணம் செய்யலாம். எனினும் பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை உறுதி செய்வது அவசியமாகிறது. இதற்காக மும்பை நகரில் ஆட்டோ டிரைவர்கள் பலர் தங்கள் ஆட்டோக்களில், ஐஸோலேஷன் கவரை (Isolation Cover) பொருத்தி வருகின்றனர்.

இந்த கவர் டிரைவரையும், பயணிகளையும் தனிமைப்படுத்தி, சமூக விலகலை உறுதி செய்யும். மும்பையில் தற்போது ஏராளமான ஆட்டோக்களில் இந்த கவரை பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை இந்த கவர் குறைக்கும் என்பதால், மும்பை ஆட்டோ டிரைவர்கள் பலர் இதனை பொருத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் இந்த கவர்களை தயாரிக்கும் தொழிலும் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. இதன்படி மும்பை நகரை சேர்ந்த விக்கி நாக்பால் என்பவரும் ஆட்டோக்களுக்கான ஐஸோலேஷன் கவர்களை தயார் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே கார்களுக்கு இந்த கவரை தயாரித்து வந்தோம்.

இதற்கு அடுத்தபடியாக தற்போது ஆட்டோக்களுக்கு தயாரித்து வழங்குகிறோம். மும்பை மாநகரில் நாளுக்கு நாள் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. இதன்படி தற்போது ஆட்டோக்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ உரிமையாளர்கள் எங்களிடம் வருகின்றனர்.
அவர்களுக்காக நாங்கள் இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளோம்'' என்றார். இதுகுறித்து ஆட்டோ டிரைவரான முகமது யூசுப் என்பவர் கூறுகையில், ''எங்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு முக்கியமானது. இதனால் 2 தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, ஐஸோலேஷன் கவரை நான் பயன்படுத்தி வருகிறேன்'' என்றார்.


Click it and Unblock the Notifications








