பெரிய மனசுய்யா உனக்கு... காரை விற்பனை செய்து இளைஞர் செய்த காரியம்... கையெடுத்து கும்பிடும் மக்கள்...
காரை விற்பனை செய்து இளைஞர் செய்த நல்ல காரியத்திற்காக, மக்கள் அவரை கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஆட்டி படைத்து வரும் நிலையில், இந்த உலகில் மனித நேயம் இன்னும் இருக்கிறது என்பதை ஒரு சிலர் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் ஷாநவாஸ் ஷேக். இவர் கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய பெரு நகரமான மும்பையை சேர்ந்தவர்.

மும்பையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான மலாடில் ஷாநவாஸ் ஷேக் வசித்து வருகிறார். கடந்த மே 28ம் தேதி அவரது வாழ்க்கையில் ஒரு துயர சம்பவம் அரங்கேறியது. ஷாநவாஸ் ஷேக்கின் பிஸ்னஸ் பார்ட்னருடைய சகோதரி அன்றைய தினம் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தார் என்ற தகவல் உங்கள் மனதை உலுக்கலாம்.

தீவிரமாக முயற்சி செய்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனை மருத்துவமனையாக அவர் அலைக்கழிக்கப்பட்டார். 5 மருத்துவமனைகள் அவரை அனுமதிக்க மறுத்து விட்ட நிலையில், 6வது மருத்துவமனைக்கு வெளியே, ஆட்டோ ரிக்ஸாவில் அவர் உயிர் பிரிந்தது. இந்த சோகமான சம்பவம் ஷாநவாஸ் ஷேக்கின் மனதை உலுக்கி எடுத்தது.

உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைத்திருந்தால், அவரது உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என்ற தகவல் பின்னர் அவருக்கு தெரியவந்தது. இதனால் தனது எஸ்யூவி ரக காரை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில், தேவைப்படும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்க ஷாநவாஸ் ஷேக் முடிவு செய்தார்.

பெரிய மனம் படைத்த ஷாநவாஸ் ஷேக்கிற்கு, தற்போது 31 வயதாகிறது. ஃபோர்டு எண்டேவர் (Ford Endeavour) கார் ஒன்றை அவர் வைத்திருந்தார். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுடன், ஃபோர்டு எண்டேவர் போட்டியிட்டு வருகிறார்.

ஷாநவாஸ் ஷேக்கின் மதிப்புமிக்க உடைமைகளில் ஒன்றாக இந்த ஃபோர்டு எண்டேவர் கார் இருந்து வந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர் இந்த காரை வாங்கினார். அப்போது '007' என்ற பிரீமியமான நம்பர் பிளேட்டை பெறுவதற்காவும், பிரத்யேகமான மியூசிக் சிஸ்டத்தை வாங்குவதற்காகவும் ஷாநவாஸ் ஷேக் அதிகமாக செலவு செய்திருந்தார்.

லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அந்த காரை அவர் தற்காலிக ஆம்புலன்ஸாக பயன்படுத்தி வந்தார். ஆனால் இடையில் நடந்த எதிர்பாராத நிகழ்வு காரணமாக காரை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர் இலவசமாக சப்ளை செய்ய தொடங்கினார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் பணிகளை அவர் கடந்த ஜூன் 5ம் தேதி தொடங்கினார். அன்று முதல் தற்போது வரை, கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர் இலவசமாக வழங்கியுள்ளார். இதற்காக ஷாநவாஸ் ஷேக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இது தொடர்பாக ஷேக் கூறுகையில், ''உயிரிழந்த பெண்ணின் கணவர், அவரை ஐந்து மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றார். ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை அனுமதிக்க தயாராக இல்லை. கோவிட்-19 வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்களை அனுமதிக்க படுக்கைகள் இல்லை என சில மருத்துவமனைகள் தெரிவித்தன.

வேறு சில மருத்துவமனைகளோ, வென்டிலேட்டர்கள் இல்லை என கையை விரித்து விட்டன. இதனால் 6வது மருத்துவமனைக்கு வெளியே ஆட்டோ ரிக்ஸாவில் அவர் உயிரிழந்தார். டாக்டர்களாக இருக்கும் எனது நண்பர்கள் சிலரிடம் இந்த சம்பவத்தை பற்றி கூறினேன். அவருக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம் என டாக்டர் நண்பர்கள் கூறினர்.

எனவே இதேபோன்ற சூழ்நிலைகளில் இருக்கு மக்களுக்கு உதவ வழி கண்டறிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உருவானது'' என்றார். உதவி செய்வது என முடிவெடுத்த உடனேயே கள நிலவரத்தை அவர் ஆராய தொடங்கினார். அப்போது ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக ஷாநவாஸ் ஷேக் மேலும் கூறுகையில், ''ஆக்ஸிஜன் சிலிண்டர் உற்பத்தியாளரை நேரடியாக தொடர்பு கொள்ள எனது நண்பர்களில் ஒருவர் உதவினார். சிலிண்டர்களை வாங்கி இலவசமாக வழங்கும் எனது முடிவை பற்றி அவர்களிடம் சொன்னேன். அதன்பின் அவர்களுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை செய்தனர்'' என்றார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியதும், தேவைப்படுபடும் நபர்கள் அணுகலாம் என ஷாநவாஸ் ஷேக்கும், அவரது நண்பர்களும் சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதில், ஷாநவாஸ் ஷேக்கின் தொலைபேசி எண்ணும் இணைக்கப்பட்டது. இதுகுறித்து ஷாநவாஸ் ஷேக் கூறுகையில், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது என அழைப்பவர்களிடம் இரண்டு விஷயங்களை மட்டுமே கேட்கிறோம்.

ஒன்று டாக்டரின் பரிந்துரை. இரண்டாவது அவர்களாகவே வந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்து கொள்ள வேண்டும்'' என்றார். எனினும் குடும்பமே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போன்ற சமயங்களில் மட்டும், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த தன்னார்வலர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்து சென்று வழங்குகின்றனர்.

இதுகுறித்து ஷாநவாஸ் ஷேக் கூறுகையில், ''ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்டு செல்லும் தன்னார்வலர்கள் வீடுகளுக்கு உள்ளே செல்ல மாட்டார்கள். அத்துடன் பிபிஇ கிட் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள்'' என்றார். ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குவதுடன் நின்று விடாமல், அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ற பயிற்சியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதே சமயம் மிகவும் நேசித்த காரை விற்பனை செய்தது மனதிற்கு வலியை ஏற்படுத்தவில்லையா? என்ற கேள்விக்கு ஷாநவாஸ் ஷேக் மிகவும் உறுதியாக இல்லை என கூறியுள்ளார். இதுகுறித்து ஷாநவாஸ் ஷேக் கூறுகையில், ''ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு காரை விட்டு கொடுப்பது என்பது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.

இதற்காக ஒரு குடும்பத்தால் நான் ஆசிர்வதிக்கப்பட்டால் கூட, ஏதேனும் ஒரு நாள் என்னால் இதுபோன்ற 4 கார்களை வாங்க முடியும்'' என்றார். காரை விற்பனை செய்து அந்த பணத்தில் மக்களுக்கு உதவி செய்து வரும் ஷாநவாஸ் ஷேக்கிற்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








