டோல்கேட்களை தாக்கிய கொரோனா வைரஸ்... இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது...
கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் டோல்கேட்களின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் இன்று மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 18,906 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 4,23,142 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், 1,09,145 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது மட்டுமே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால், மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் இதைதான் வலியுறுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இந்திய சாலைகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கலெக்ஸன் ஒரு வாரத்தில் பாதியாக குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கடந்த ஒரு வாரத்தில் டோல் கலெக்ஸன் 50 சதவீதம் குறைந்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில், மக்களின் பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது விதித்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்து முடங்கி போயுள்ளதே டோல்கேட் கட்டண கலெக்ஸன் இவ்வாறு மிக கடுமையாக குறைந்து போயிருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (National Highways Authority of India - NHAI) சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா முழுவதும் தற்போது பாஸ்ட்டேக் மூலமாகவே கிட்டத்தட்ட 70 சதவீத பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த ஞாயிற்று கிழமையன்று சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமையன்று பாஸ்ட்டேக்குகள் மூலமாக 33.12 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. முந்தைய ஞாயிற்று கிழமையுடன் ஒப்பிடும்போது இது 48 சதவீத சரிவாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் தினமும் சராசரியாக வசூலாகும் தொகை 85 கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் தற்போது பாஸ்ட்டேக் மூலமாக நடைபெற்று வருகின்றன. எனவே டோல் கலெக்ஸனின் தற்போதைய நிலவரத்தை பாஸ்ட்டேக் எண்களே தெளிவாக கூறி விடுகின்றன. ரொக்க பணம் மூலமான டோல் கலெக்ஸனிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது'' என்றார்.

தற்போது மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையிலும், ஒரு சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் வலம் வருகின்றனர். அத்தகைய வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை தரப்பில் மிகவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமென்றால், அரசாங்கத்திற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது அவசியம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








