ஒடிசா அரசு அதிரடி உத்தரவு... கொண்டாட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள்... என்னனு தெரியுமா?
ஒடிசா அரசு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவால் தனியார் பஸ் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) வேகம் எடுத்து வரும் நிலையிலும், இந்தியாவில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் இந்தியாவில் பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

பேருந்து, ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. அத்துடன் கார், டூவீலர் போன்ற தனியார் வாகனங்களை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதை மீறி இயக்கப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

ஆனால் தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழல் உருவாகி வருகிறது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸிகளை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் விமான சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

புலம்பெயரும் தொழிலாளர்களுக்காக தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் ரயில் போக்குவரத்தும் தொடங்கப்படவுள்ளது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பேருந்து சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. பஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று.

ஒடிசாவில் கடந்த வியாழக்கிழமை (மே 28) முதல் மீண்டும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. அங்கு கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பஸ் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றையும் ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

இதன்படி பயணிகள் பேருந்துகளுக்கு, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாத காலத்திற்கு, சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன் தினம் (வெள்ளி) ஒடிசா அரசு வெளியிட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு மத்தியில் இது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைத்த நிவாரணமாக பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததால், மேற்குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்கு, பஸ் உரிமையாளர்களிடம் இருந்து சாலை வரி வசூலிக்கப்படாது என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. ஒடிசா பஸ் உரிமையாளர்கள் சங்கம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு அதனை ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பொது போக்குவரத்து சேவைகள் வரும் காலங்களில் எவ்வளவு லாபகரமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் கார், பைக் போன்ற சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை அவர்கள் விரும்பலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் சொந்த வாகனத்தில் பயணம் செய்வதையே அவர்கள் பாதுகாப்பானதாக கருதக்கூடும். இதனால் பொது போக்குவரத்து வாகனங்கள் பழையபடி லாபகரமாக இயங்குமா? என்பது சந்தேகம்தான். அதே சமயம் கொரோனா அச்சம் காரணமாக, கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது. ஊரடங்கு காரணமாக வாகன விற்பனை சரிந்திருந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் ஆய்வு முடிவுகள் அனைத்தும், இந்தியர்கள் சொந்த கார் வைத்திருப்பதை விரும்புவதாக கூறி வருகின்றன. எனவே ஊரடங்கில் விட்டதை பிடித்து விடும் முனைப்புடன் கார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








