கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அதிரடி... தைரியம் காட்டும் மத்திய அரசு
கொரோனாவால் நிலைகுலைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, மத்திய அரசு தைரியமான முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) முடக்கி போட்டுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு இது ஒன்றுதான் தற்போதைக்கு நம் கையில் இருக்கும் வழியாக உள்ளது. எனவே உலக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கோவிட்-19 வைரஸால் மனித உயிர்கள் கொத்து கொத்தாக பறிபோய் வரும் நிலையில், மறுபக்கம் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்புகளை தடுக்கும் அதே நேரத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கடமையும் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு நீடித்து வருகிறது. முதலில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரைதான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் வேலையிழந்திருப்பதுடன், பொருளாதாரமும் முடங்கியுள்ளது. எனவே கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான இலக்கை நிர்ணயம் செய்வது தொடர்பாக யோசித்து கொண்டிருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து பொருளாதாரத்தை வெகு விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக, நெடுஞ்சாலை பணிகளை வேகப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இந்தியாவில் ஊரடங்கு காரணமாக முடங்கியிருந்த தேசிய நெடுஞ்சாலை பணிகள் தற்போது மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் 70 சதவீத தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை பணிகள் மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளன.

பொருளாதாரம் முற்றிலும் நலிந்து விடக்கூடாது என்பதற்காக, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள ஒரு சில பகுதிகளில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் (திங்கள்), பாதுகாப்பு நிபந்தனைகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன்படி சில துறைகள் மீண்டும் இயங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த நடந்து வரும் போருக்கு மத்தியில், ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வு காரணமாக, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் 70 சதவீத நெடுஞ்சாலை பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. மொத்தம் 375 திட்டப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் 260 திட்டப்பணிகளை மட்டுமே மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேசமயம் டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கோவிட்-19 பாதிப்பு இங்கு அதிகமாக இருப்பதே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள பகுதிகளில், வெவ்வேறான பிரச்னைகள் காணப்படுகின்றன.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ''திட்டப்பணிகள் நடைபெறும் ஒரு சில இடங்களில் சில பிரச்னைகள் காணப்படுகின்றன. சில இடங்களில் பணியாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். அதே சமயம் இன்னும் சில சைட்களில், சரக்கு மற்றும் மூலப்பொருட்களில் பற்றாக்குறை ஏற்படும் சூழல் எதிர்பார்க்கப்படுகிறது'' என்றனர்.

கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என இரு பெரும் சவால்களை ஒரு சேர சந்திக்க வேண்டிய நெருக்கடி மத்திய அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. எனினும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பொருளதாரத்தை மீட்டெடுக்கலாம் என்பதால், நெடுஞ்சாலை பணிகளுக்கு புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








