கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா... கோவத்தில் டிரம்ப் செய்த காரியம்... இப்போதான் வேகம் எடுக்குது...
கொரோனா வைரஸால் அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவை நிறைவேற்றும் பணிகள் வேகம் எடுத்துள்ளன.

கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை 35,334 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 7,41,777 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ், சீனா, இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் என உலகின் பல்வேறு நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், மருத்துவ உபகரணங்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக வென்டிலேட்டர்கள்தான் அதிக அளவில் தேவைப்படுகின்றன. கோவிட்-19 வைரஸ் நோயாளிகளின் சுவாச மண்டலத்தை தாக்க கூடியது என்பதால், வென்டிலேட்டர்களின் தேவை அதிகளவில் உள்ளது. எனவே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தரும்படி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை பல்வேறு நாடுகளின் அரசுகளும் நாடியுள்ளன.

உலக வல்லரசான அமெரிக்காவும் இதில் ஒன்று. டெஸ்லா, ஃபோர்டு மற்றும் ஜென்ரல் மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம், வென்டிலேட்டர்களை தயாரித்து வழங்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். அமெரிக்காவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருப்பதால், வென்டிலேட்டர்களை விரைவாக தயாரித்து வழங்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இதனை ஏற்று கொண்டன. எனினும் வென்டிலேட்டர்கள் விவகாரத்தில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் காட்டமாக விமர்சனம் செய்தார். ஆனால் தற்போது அதற்கு மாறாக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார்.

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை முதலில் விமர்சனம் செய்து விட்டு தற்போது டிரம்ப் பாராட்டியிருப்பது கவனம் பெற்றுள்ளது. ''ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான பணியை செய்து வருகிறது. எனவே ஜென்ரல் மோட்டார்ஸை பற்றி நாம் கவலைப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை'' என்று டிரம்ப் நேற்று (மார்ச் 29) கூறியுள்ளார்.

''உண்மையில் அவர்கள் மிக மிக கடினமாக உழைக்கிறார்கள். ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பற்றி நல்ல விதமான அறிக்கைகள் எனக்கு கிடைப்பதாக நான் நினைக்கிறேன்'' எனவும் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை டொனால்டு டிரம்ப் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஆனால் ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் நேரத்தை வீணடிக்கிறது என்கிற ரீதியில் டிரம்ப் முதலில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

எனவே ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கோகோமா இன்டியானா பிளாண்ட்டில், வென்டிலேட்டர்களை தயாரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை புகைப்படமாக எடுத்து நேற்று வெளியிட்டது. கோடை காலத்தில் ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் வென்டிலேட்டர்களை தயாரிக்க ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வென்டிலேட்டளை தயாரிக்கும் பணிகள் வேகம் எடுத்திருப்பது நல்ல செய்திதான். இந்தியாவை பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முன் வந்துள்ளது. அதற்கு ஏற்ப வென்டிலேட்டரின் புரோட்டோடைப்பை வெறும் 48 மணி நேரங்களில் மஹிந்திரா உருவாக்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போரில், முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications








