கொரோனா ஹெல்மெட்டிற்கு காரணம் இதுதான்... தமிழ்நாடு போலீஸ் எப்பவுமே வேற லெவல்... தூள் கௌப்புங்க சார்
சென்னையில் கொரோனா ஹெல்மெட் அணிந்து காவல் துறை அதிகாரி பணியாற்றி வருகிறார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக மக்கள் இன்று அதிகம் உச்சரிப்பது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். ஒன்று கொரோனா வைரஸ். மற்றொன்று கோவிட்-19. கொரோனா வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தற்போது உலகையே ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 28,244 பேரின் உயிரை கோவிட்-19 வைரஸ் பறித்துள்ளது. மேலும் 6,14,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட்-19 வைரஸால் நிலைகுலைந்து போயுள்ளன. இதில், சீனா மட்டும் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறது. சீனா மீது பல்வேறு சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

எனினும் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசியம் இல்லாமல் ஒரு சிலர் வாகனங்களில் உலா வந்து கொண்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதால், அதில் ஜாலி ரைடு செல்வதற்காக இப்படி சிலர் வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் புரியவில்லை. எனவே வாகன ஓட்டிகள் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அவசியம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் வழக்கு பதிவும் செய்யப்படுகிறது. தேவையில்லாமல் வெளியே வந்தவர்களை காவல் துறையினர் தாக்கிய சம்பவங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதவிர வித்தியாசமான ஒரு சில முயற்சிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி தேவை இல்லாமல் ஊர் சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு, கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வை கன்னியாகுமரி போலீசார் நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சென்னை காவல் துறையும் கவனம் ஈர்த்துள்ளது. ஆம், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை காவல் துறை அதிகாரி ஒருவர் கொரோனா ஹெல்மெட்டை அணிந்துள்ளார்.

வாகன ஓட்டிகளுக்கு கோவிட்-19 வைரஸின் தீவிரம் இன்னும் புரியவில்லை. எனவே பலர் வீடுகளில் இருந்து வெளியே வந்து கொண்டுள்ளனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை வீடுகளிலேயே இருக்க வைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான கொரோனா வைரஸ் ஹெல்மெட்டை கௌதம் என்ற கலைஞர் டிசைன் செய்துள்ளார்.

இது குறித்து கௌதம் கூறுகையில், ''பொதுமக்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸை இன்னமும் சீரியஸாக எடுத்து கொள்ளவில்லை. மறுபக்கம் மக்களை வீடுகளில் இருக்க வைப்பதற்காக, காவல் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கப்படும். எனவேதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது'' என்றார்.

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஹெல்மெட் உதவுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் பாபு என்பவர் பயணிகளிடம் பேசுகையில் இந்த ஹெல்மெட்டை அணிகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் இன்னமும் சாலைக்கு வந்து கொண்டுள்ளனர்.

எனவே கோவிட்-19 வைரஸின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இந்த ஹெல்மெட்டை பயன்படுத்துகிறோம். ஏதேனும் ஒன்றை வித்தியாசமாக செய்யும் முயற்சிதான் இந்த ஹெல்மெட். நான் இந்த ஹெல்மெட்டை அணியும்போது, பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய எண்ணம் மனதில் வரும்'' என்றார். நீங்க கலக்குங்க சார்!!!
Image Courtesy: ANI


Click it and Unblock the Notifications








