கொரோனாவை தடுக்க சூப்பர் ஐடியா... தொழில் அதிபர்களையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த சாதாரண இந்தியர்
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு, சூப்பரான ஐடியா ஒன்றை கண்டுபிடித்துள்ள சாதாரண இந்தியருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19), நமது வாழ்க்கை முறையை தலை கீழாக மாற்றியுள்ளது. சுதந்திரமாக சுற்றி திரிந்த நாம், இன்று ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறோம். கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பெரும்பாலான நாடுகளில் தற்போது ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிப்பது ஒன்றுதான் கொரோனாவை ஒழித்து கட்டுவதற்கு நம்மிடம் தற்போது இருக்கும் மிகப்பெரிய ஆயுதம்.

இதனால் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக இந்திய சாலைகள் தற்போது முடங்கி கிடக்கின்றன. பஸ், டாக்ஸி மற்றும் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை. கொரோனா வைரஸ் நமது தற்போதைய வாழ்க்கையை மாற்றியிருப்பது மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கையையும் மாற்றவுள்ளது.

குறிப்பாக பொது போக்குவரத்தில்தான் நாம் மிகப்பெரிய மாற்றத்தை பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து விதமான பொதுமக்களும் ஒன்று கூடி பயணிக்கும் வாகனங்களாக பஸ், டாக்ஸி மற்றும் ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் இருக்கின்றன. ஊரடங்கிற்கு பின் பொது போக்குவரத்தில், நாம் எப்படி சமூக விலகலை கடைபிடிக்க போகிறோம்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

பஸ்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை கடைபிடிப்பது உண்மையிலேயே மிக சவாலான ஒரு விஷயம்தான். எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக, பொது போக்குவரத்தை பொதுமக்கள் தவிர்க்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக கார் போன்ற சொந்த வாகனங்களில் பயணிப்பதை மக்கள் பாதுகாப்பானதாக கருதலாம்.

எனவே கார்களின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதே சமயம் பேருந்து போன்ற வாகனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது. எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், கேரளாவில் பேருந்துகளை இயக்க வேண்டாம் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நஷ்டம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவை கேரள மாநில அரசிடம் கூறவும் அவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், பொது போக்குவரத்து வாகனங்களில் சமூக விலகலை கடைபிடிப்பதில் இருக்கும் பிரச்னைக்கு, சாதாரண எலெக்ட்ரிக் ரிக்ஸா டிரைவர் ஒருவர் சூப்பரான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.

நாட்டின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, அந்த தீர்வை பாராட்டியிருப்பதும் கவனம் பெற்றுள்ளது. மஹிந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ்-ஆக இருக்க கூடியவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியர்களின் புத்திசாலித்தனத்தை காட்டும் வீடியோக்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். சமூக விலகலை கடைபிடிப்பதில் இருக்கும் பிரச்னைக்கு, அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் இருக்கும் எலெக்ட்ரிக் ரிக்ஸாவில் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸாவில், அதனை ஓட்டும் டிரைவர் தனியாக அமர்ந்திருக்கிறார்.

அவருக்கு பின்னால், அந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா ஒட்டுமொத்தமாக சிறு சிறு கேபின்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயணிகளுக்கு இடையே, பிஸிக்கல் கான்டாக்ட் (Physical Contact) இருப்பதற்கான சாத்தியக்கூறு நீக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா மொத்தம் 4 சிறு சிறு கேபின்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் அனைவரும் டிரைவருக்கு எதிர்திசையை பார்த்து அமர்ந்திருக்கும்படி இந்த எலெக்ட்ரிக் ரிக்ஸா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டர் வாயிலாக அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
எந்தவொரு பிரச்னைக்கும் உடனடியாக தீர்வு கண்டுபிடிப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள். அதுவும் எளிய முறையில் தீர்வை கண்டுபிடித்து விடுவார்கள். இந்த வீடியோவில் பின்பற்றப்பட்டிருக்கும் ஐடியா அதை நிரூபணம் செய்கிறது. கொரோனா பரவலை தடுக்க இதுபோன்ற புதுமையான ஐடியாக்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.


Click it and Unblock the Notifications








