போதிய சாலை வசதி இல்லை... ஜேசிபி வாகனத்தில் ஆற்றை கடந்துசென்ற மருத்துவ பணியாளர்கள்!! சவாலான பயணம்...
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொக்லைன் வாகனத்தில் ஆற்றை கடந்து செல்லும் மருத்துவ பணியாளர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தற்போது தான் மெல்ல மெல்ல நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இதனால் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த மே மாதத்தில் போடப்பட்ட ஊரடங்குகளை ஒவ்வொரு மாநிலங்களாக வாபஸ் பெற்று வருகின்றன.

தமிழகத்தில் முதல்வர் இன்று ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இருப்பினும், என்ன தான் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும் மருத்துவ பணியாளர்களின் வேலை பளு இன்னமும் குறைந்தபாடில்லை.

அதற்கு ஒரு உதாரணமாகவே தற்போது லடாக்கில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பார்க்கின்றோம். போக்குவரத்திற்கு சாலையே இல்லாத கிராம பகுதிகளில் கூட கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சாலை வசதி இல்லாததினால் அந்த பகுதி மக்களை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா.

அதனால் தான் இந்த மருத்து பணியாளர் குழுவினர் ஆற்றை கடக்க ஜேசிபி எனப்படும் பொக்லைன் இயந்திர வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர், வேறு வழியும் இல்லை. லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் டீசேரிங் நமஃபயல் அவர்கள் இந்த தகவலை படத்துடன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் ஆர்பரித்து ஓடும் ஆற்றை பொக்லைன் ஒன்று கடப்பதையும், அதன் முன்பக்கத்தில் மருத்துவ பணியாளர்கள் நால்வர் அமர்ந்துள்ளதையும் பார்க்கலாம். இதுகுறித்து இந்த பாஜக எம்பி, #கொரோனாவீரர்களுக்கு எங்களது சல்யூட்.கிராமப்புற லடாக்கில் தங்கள் சேவைகளை வழங்க கோவிட் போர்வீரர்களின் குழு ஆற்றை கடக்கிறது. வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள். கொரோனா வீரர்களுக்கு ஒத்துழைக்கவும் என டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

எம்பி-யின் இந்த பதிவிற்கு பலரது தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் பலர் மருத்துவ பணியாளர்களின் சவாலான பயணத்தை பாராட்டியுள்ள நிலையில், சிலர் போதிய சாலை வசதி இல்லாதது குறித்து எம்பி-யிடமே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லடாக்கை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் தான் அறிவித்தது. இந்த யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரையில் 20,000-ஐ நெருங்கி கொண்டு வருகிறது. இதில் ஆக்டிவாக இருப்பவை 1,011 என செய்திகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








