இந்திய சாலைகளில் இந்த பிரச்சனை எப்போதுதான் தீருமோ!! கண்ணிமைப்பதற்குள் நடந்து முடிந்த விபத்து!
ஷோரூமில் இருந்து பைக்கை எடுத்த பின்னர், முதல் ட்ரிப் இப்படியா முடிய வேண்டும்? என கேட்க தோன்றும் விதமாக, பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) பைக்கை புதியதாக வாங்கிய நபருக்கு சாலையில் ஒரு சிறப்பான சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.
நம் இந்திய சாலைகளில், குறுக்கே எது எப்போதுவரும் என்றே சொல்ல முடியாது. காட்டுவழிச் சாலையில் செல்லும்போது குறுக்கே வன விலங்குகள் வருவது சாதாரண ஒன்றுதான். ஏனெனில், காட்டின் குறுக்கே சாலையை அமைத்து நாம் செல்வதால், குறுக்கே வன விலங்குகள் வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், மற்ற சாலைகளில் குறுக்கே நாய், மாடு, பூனை என வீட்டு வளர்ப்பு பிராணிகள் வருவதை முற்றிலுமாக ஏற்க முடியாது. ஏனெனில், வீட்டு வளர்ப்பு பிராணிகளை பராமரிக்கும் அவற்றின் உரிமையாளர்கள் அவற்றை சாலைக்கு வரவிடாமல் தடுப்பது முக்கியமாகும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
விலையுயர்ந்த, ஆற்றல்மிக்க மோட்டார்சைக்கிள்களை வைத்திருப்போர் ஒரு குழுவாக இணைந்து நீண்டதூர பயணங்களை மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான். இவ்வாறான குழு பயணங்கள் இந்தியா முழுவதுமே வெவ்வேறான இடங்களில் அவ்வப்போது நடந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. அவ்வாறு இங்கு ஒரு பைக் குழு தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். எந்த பகுதியை நோக்கி இவர்களது பயணம் சென்றுக் கொண்டிருந்தது என்கிற விபரம் தெரியவில்லை.

இந்த பைக் குழுவில், பஜாஜ் டோமினார் 400 பைக்கை வைத்திருக்கும் ஒருவர் தனது ஹெல்மெட்டில் கேமராவை பொருத்தி அதில் காட்சிப்படுத்தப் படுபவற்றை யூடியூப்பில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவ்வாறு சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவருக்கு நேர்ந்த விபத்து தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வழக்கம்போல், குழுவாக இணைந்து பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. சாலையின் ஓரத்தில் சென்றுக் கொண்டிருந்த அந்த மாடு இந்த டோமினார் பைக் ஓட்டி செல்லும் நேரத்தில் சரியாக சாலையை கடக்க முயன்றுள்ளது. இதனை இந்த பைக் ஓட்டுனர் முற்றிலுமாக எதிர்பார்க்கவில்லை. கண்ணிமைப்பதற்குள் பைக் மாடு மீது மோதிவிட்டது.

பிறகு என்ன... பைக் ஒருபக்கமாக சரிந்து கீழே விழ, மாடு ஒருபக்கம் வலி தாங்க முடியாமல் சாலையில் படுத்துவிட்டது. இந்த சம்பவத்தின்போது, டோமினார் 400 பைக்கின் பின் இருக்கையிலும் ஒருவர் இருந்துள்ளார். இதனால், அவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளார். நல்லவேளையாக, இந்த டோமினார் பைக் ஓட்டி கடைசி நேரத்தில் கொஞ்சம் பிரேக் கொடுத்தார். அதனால்தான், சேதாரங்கள் பெரியதாக இல்லை.
மோதலுக்கு உள்ளான மாடு பின்னர் மெதுவாக எழுந்து தனது வீட்டை நோக்கி செல்வதை வீடியோவில் காணலாம். இந்த நிகழ்வின்போது, பைக்கில் இருந்த இருவரும் முறையாக அனைத்து பாதுகாப்பு கவசங்களையும் அணிந்து இருந்தனர். இதனால், சாலையில் விழுந்தாலும் பெரியதாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மாடு உடன் மோதியதில், பைக்கின் ஹேண்டில்பார் உடைந்துவிட்டது மற்றும் மற்ற சில பாகங்களும் சேதாரமாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாடுகள் பாதி நேரங்களில் கண்மூடித்தனமாக சாலையை கடக்கும் என்றாலும், பாதி நேரங்களில் வாகனங்கள் வருகிறதா என பார்த்த பின்பே சாலையை கடக்கும். மேலே பார்த்த விபத்துக்கு முக்கிய காரணம், சாலையின் ஓரத்தில் மாட்டிற்கு அருகே நடந்து சென்ற நபர் ஆவார். ஏனெனில், அந்த நபரினால்தான் மாடு பைக் ஓட்டியை பார்க்கவில்லை, பைக் ஓட்டியும் மாட்டை பார்க்கவில்லை. இருவருக்கும் மத்தியில் மறைப்பு போல் அந்த நபர் இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications









