காரில் மாட்டு சாண கோட்டிங்கிற்கு உண்மையான காரணம் இதுதான்... உலகம் முழுக்க வைரலான இந்திய பெண் அதிரடி
மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்ததன் மூலம் உலகம் முழுக்க வைரலான இந்திய பெண், தற்போது அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு டொயோட்டா கரொல்லா காரின் புகைப்படங்கள் வைரலாக பரவின. தேர்தல் நேர பரபரப்புகளையும் மீறி அந்த கார் குறித்து பலரும் விவாதிக்க தொடங்கினர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அந்த காரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், ஷேஜல் ஷா என்ற பெண்தான் அந்த காரின் உரிமையாளர் எனவும் அப்போது தகவல்கள் வெளியாயின. இத்தனை பேரின் கவனத்தை அந்த கார் ஈர்க்க என்ன காரணம் என நீங்கள் கேட்பது புரிகிறது.

மாட்டு சாணத்தால் அந்த கார் கோட்டிங் செய்யப்பட்டிருந்ததுதான் இவை அனைத்திற்கும் காரணம். ஆம், உண்மையில் மாட்டு சாணம்தான். எனவேதான் நெட்டிசன்கள் அனைவரும் அந்த வித்தியாசமான கார் குறித்து பரபரப்பாக விவாதிக்க தொடங்கினர்.

அத்துடன் மாட்டு சாணத்தால் கார் கோட்டிங் செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக பல்வேறு யூகங்களும் கிளம்பின. இந்த சூழலில் அந்த காரின் உரிமையாளர் பெயர் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஷேஜல் ஷாதான் என்பதும், அவர் அகமதாபாத் நகரை சேர்ந்தவர்தான் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

அவரிடம் ஏஎன்ஐ நியூஸ் ஏஜென்சி பேட்டி கண்டுள்ளது. அத்துடன் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகி வைரலான புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது அந்த காரின் வெளிப்புற டிசைன் மாறியிருப்பது இந்த வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது.

நாம் ஏற்கனவே பார்த்த புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், அதன் தோற்றம் சற்று வித்தியாசமாக உள்ளது. அதாவது முன் பக்க மற்றும் பின் பக்க பம்பர்கள் உள்பட கார் முழுவதும் பாரம்பரியமான இந்திய பேட்டர்ன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டிலும் கூட நம்மால் அதனை காண முடிகிறது.

இந்த சூழலில், மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தது ஏன்? என்பதையும் அந்த வீடியோவில் ஷேஜல் ஷா விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: போர்வை போர்த்தியது போன்று மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்திருப்பது எனது காருக்கு மிகவும் பயன் அளிக்கிறது.

காரின் உள்ளே டெம்ப்ரேச்சரை கட்டுக்குள் வைப்பதை இது உறுதி செய்கிறது. வெளிப்பகுதி வெப்பத்தின் அளவு 45 டிகிரி செல்சியஸ் என்றால், காரின் கேபினுக்குள் ஏசியை பயன்படுத்தாமலேயே 36-37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது இந்தியாவில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக இந்த விஷயத்தில் வட மாநிலங்களின் நிலைமை மிகவும் மோசம். மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க மக்களை இது கட்டாயப்படுத்துகிறது.

எனவே கோடை வெயிலை சமாளிக்க மக்கள் புதிது புதிதாய் ஏதேனும் ஒன்றை யோசித்து கொண்டுதான் உள்ளனர். அந்த வகையில்தான் ஷேஜல் ஷாவிற்கு, மாட்டு சாணத்தால் கார் முழுவதையும் கோட்டிங் செய்யும் யோசனை உதித்துள்ளது.

பொதுவாக வெளிப்புற வெப்ப நிலையை காட்டிலும் காரின் கேபினுக்குள் அதிக வெப்ப நிலை நிலவும். இது தவிர வேகமாக சூடாகவும் செய்யும். உள்ளே இருப்பவர்களின் உயிரையே பறிக்கும் அளவிற்கு கூட கேபின் டெம்ப்ரேச்சர் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோடை காலங்களில் ஏசி இல்லாமல் கார்களில் பயணிக்க முடியாது. அப்படி இருக்கையில் ஏசி இல்லாமலேயே, வெளிப்புற வெப்ப நிலையை காட்டிலும், கேபின் டெம்ப்ரேச்சர் குறைவாக இருப்பதாக ஷேஜல் ஷா கூறியுள்ளார்.

அத்துடன் இயற்கைக்கு தீங்கு இழைக்காமல் காரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும் மாட்டு சாண கோட்டிங்கை தேர்வு செய்ததாக ஷேஜல் ஷா கூறியுள்ளார். ஏசிக்கள் வெளியிடும் அபாயகரமான வாயுக்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த கோட்டிங் காரில் எவ்வளவு நாட்களுக்கு நீடித்து இருக்கும் என்பது தெரியவில்லை. மக்கள் இந்த காரை மிகவும் ஆச்சரியத்துடன்தான் பார்த்து வருகின்றனர். இதனிடையே ஷேஜல் ஷாவின் நேர்காணல் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால், மண் குடிசைகளில் கூட மாட்டு சாண கோட்டிங் பயன்படுத்தப்படுகிறது. உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க அது உதவும். ஆனால் ஒரு காரில் இது எந்த அளவிற்கு வேலை செய்யும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

முன்னதாக காரில் மாட்டு சாண கோட்டிங் செய்ததன் மூலம் இந்தியாவை கடந்து உலகம் முழுக்க வைரல் ஆகியுள்ளார் ஷேஜல் ஷா. ஒரு சில வெளிநாட்டு பத்திரிக்கை மற்றும் ரேடியோக்கள் கூட இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








