நாகையில் அமைய இருக்கும் பிரமாண்ட ஆலை! பெட்ரோல்-டீசலை போல வாகனங்களுக்கான புதிய எரிசக்தியை உருவாக்க முயற்சி!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகள் பழைய டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், நாட்டில் அதிக வயதுடைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றன.
இதனால்தான் மத்திய மாநில அரசுகள் பழைய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. குறிப்பாக, அதிக மாசை ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றிக் கொண்டு இருக்கும் வாகனங்களை சிறைபிடித்தல் மற்றும் பெரும் தொகையை அபராதமாக விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் மாற்று எரிபொருளை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளும் இந்தியாவில் பலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தற்போது சிஎன்ஜி மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் மிக தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.
இதுதவிர, ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சிகளிலும் அரசு ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே சிபிசிஎல் என்று அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corporation Limited) மற்றும் ஐஐடி மெட்ராஸ் (IIT-Madras) இவர்கள் இருவரும் இணைந்து பெட்ரோல், டீசலுக்கு மாற்ற எரிசக்தியை உருவாக்க இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரீன் ஹைட்ரஜன் (Green hydrogen)-ஐயே இவர்கள் உருவாக்க இருக்கின்றனர். இந்த இணைவின்கீழ் ஐஐடி மெட்ராஸ் எலெக்ட்ரோலைசர்கள் (Electrolyzers)-யும், இதைக் கொண்டு சிபிசிஎல் கிரீன் ஹைட்ரஜனை தயாரிக்க இருக்கின்றது. கிரீன் ஹைட்ரஜன் எதிர்காலத்தின் மாபெரும் இயக்கத்திற்கான சக்தியாக இருக்கும் என சிபிசிஎல்-இன் எம்டி அர்விந்த் குமார் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.
இதனை உற்பத்திச் செய்வதற்கான பெரிய ஆலையை நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்க இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கான ஒப்புதலை பெறும் பணிகளே தற்பொது தொடங்கி இருக்கின்றன. இதற்காக 1,200 ஏக்கர் நிலம் ஏற்கனவே சிபிசிஎல் வசம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், 612 ஏக்கர் நிலத்திற்காக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஏற்கனவே, கிரீன் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கான அனுமதி தலைமை நிர்வாகத்திடம் கிடைத்துவிட்டதால் 7-8 சதவீத பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. தற்போது பொறியியல் சார்ந்த பணிகளே தொடங்கி இருக்கின்றன. மேலும், இந்த பணிகளுக்காக ரூ. 36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பெரும் தொகையைக் கொண்டே நாகைப்பட்டினத்தில் பிரமாண்ட கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட இருக்கின்றது.
நீரை மின்னாற்பகுப்பு செய்யப்பட்டு அதன் வாயிலாகப் பெறப்படும் ஹைட்ரஜனே கிரீன் ஹைட்ரஜன் ஆகும். இந்த ஹைட்ரஜனையே வாகன இயக்கத்திற்கு பயன்படுத்தும் முயற்சியில் இந்தியா களமிறங்கி இருக்கின்றது. இது சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது கழிவாக கார்பனுக்கு பதிலாக நீராவியையே வெளியேற்றும்.
நாகையில் அமைய இருக்கும் இந்த ஆலையில் ஆண்டு ஒன்றிற்கு ஒன்பது மெட்ரிக் டன் கிரீன் ஹைட்ரஜன் தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தின் தேவைக்கு ஏற்ப இந்த உற்பத்தி திறன் விரிவாக்கம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும், இந்தியாவின் இந்த முயற்சியால் பெட்ரோல், டீசல் வாகனங்களை போலவே நாட்டில் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களும் அதிகளவில் யன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சுற்றுச்சூழல் மீது அக்கறை மற்றும் அதிக லாபத்தை அவை வழங்குகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வேகமாக மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். ஆனால், விலை சற்று அதிகம் என்பதால் இந்த வேகம் சற்று பொறுமையாகவே உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹைட்ரஜன் வாகனங்களின் வருகை பற்றிய தகவலும் தலைதூக்க தொடங்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








