கார் பிடிக்கலை... அட்வான்ஸ் பணம் தர மறுத்த டிசி நிறுவனம் மீது தினேஷ் கார்த்திக் வழக்கு!!
டிசி அவந்தி காருக்கு செலுத்திய முன்பணத்தை திருப்பித் தர உத்தரவிடக்கோரி சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு டிசி டிசைன் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையுடன் வரும் டிசி அவந்தி காரின் விற்பனைக்கும் இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

முன்பதிவு
இதுதொடர்பாக, தென் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில், தினேஷ் கார்த்திக் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் சென்னையிலுள்ள டிசி நிறுவனத்தின் டீலர்ஷிப்பில் ரூ.5 லட்சம் முன்பணம் செலுத்தி, டிசி அவந்தி காருக்கு முன்பதிவு செய்தேன்.

ஏமாற்றிய டிசி டீலர்
முன்பதிவு செய்தபோதே, கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் காரை டெஸ்ட் டிரைவ் செய்ய தருவதாக உறுதியளித்தனர். மேலும், கார் திருப்திகரமாக இருந்தால், அடுத்த மாதமே, அதாவது 2014 பிப்ரவரியில் டெலிவிரியும் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அப்படியில்லையெனில், முன்பணம் வாபஸ் தரப்படும் என்று தெரிவித்தனர். அவர்கள் வார்த்தையை நம்பியே முன்பதிவு செய்தேன்.

கால தாமதம்...
ஆனால், சொன்னபடி அவர்கள் காரை டெஸ்ட் டிரைவ் செய்ய தரவில்லை. மேலும், பலமுறை டீலரை தொடர்பு கொண்டு நினைவூட்டியும் பலனில்லை. மேலும், டெலிவிரி தருவது பற்றியும் வாய் திறக்கவில்லை.

அப்பாடா...
ஒருவழியாக, கடந்த ஏப்ரல் மாதம் டிசி டிசைன் நிறுவனத்திடமிருந்து இ-மெயில் மூலம் பதில் வந்தது. அதில், சென்னையில், டெஸ்ட் டிரைவ் தர இயலாது. புனேயில் மட்டுமே டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்தி இல்லை
ஒருவழியாக, கடந்த மே மாதம் 18ந் தேதி டிசி அவந்தி காரை டெஸ்ட் டிரைவ் செய்தேன். ஆனால், எதிர்பார்த்த அளவு அந்த கார் திருப்தியை தரவில்லை. எனவே, முன்பணத்தை திருப்பி தருமாறு டீலரிடம் கேட்டேன்.

டீலர் முரண்டு
எங்களது நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டால் முன்பணத்தை திருப்தி தர இயலாது என்று டீலரிலிருந்து தெரிவித்துவிட்டனர். இதுகுறித்து சட்டரீதியில் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, எங்களது முன்பதிவு ஒப்பந்தங்களையும், விதிமுறைகளும் ஒப்புக்கொண்டு நான் கையெழுத்திட்டு இருப்பதாக கூறி பதில் அனுப்பினர். மேலும், நான் கையெழுத்திட்ட ஒப்பந்த நகலை கேட்டாலும் தர மறுக்கின்றனர்.

நஷ்ட ஈடு
இந்த விஷயத்தில் முறையற்ற வர்த்தக வழிகளை பின்பற்றி வரும் எதிர் தரப்பினர், எனது முன்பணத்தையும், அதற்குண்டான வட்டியையும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈட்டையும் வழங்க உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மைதான் இங்கு விஷயம்...
இந்த விஷயத்தில் பணம் என்பது பெரிய விஷயமல்ல; நேர்மையை பற்றியது," என்று அவர் கூறியிருக்கிறார். சென்னையில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு ஏற்பாடு செய்யாதது, குறித்த காலத்தில் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவிரி தராதது போன்ற காரணங்களும் முன்பணத்தை திருப்பி தர வலியுறுத்துவதற்கான காரணங்கள்," என்று கூறியிருக்கிறார்.

வழக்கறிஞர் கூற்று
இந்த வழக்கில் தினேஷ் கார்த்திக் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சஞ்சய் பின்டோ கூறுகையில், "எதிர் தரப்பினரின் முறையற்ற வர்த்தகம் மட்டுமில்லை. திருப்தி தராத பொருளுக்காக, மொத்த முன்பணத்தையும் வாடிக்கையாளர் தர வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கின்றனர் என்பதே இதில் முக்கியம். எந்தவொரு சட்டமும் இதற்கு அனுமதிக்காது, என்றார்.

ஒத்திவைப்பு
தென் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சமீபத்தில் வந்த இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 23ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமை...
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பிரச்சாரத்துடன் வந்த டிசி அவந்தி கார் ரூ.35 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. மிக குறைவான விலை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதால், மொத்தம் விற்பனை செய்யப்பட இருக்கும் 500 கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தொடர்ந்திருக்கும் வழக்கு டிசி டிசைன் நிறுவனத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








