ரொம்ப சந்தோஷப்படாதீங்க!! பெட்ரோல் & டீசல் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம்! அடிக்கும் எச்சரிக்கை மணி
பெட்ரோல் & டீசல் விலைகள் வரும் மாதங்களில் இதுவரையில் இல்லாத உச்சத்தை அடைய உள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அலுவலகங்களில் பணிப்புரிவோர் பெரும்பாலானோர் தீபாவளிக்கு போனஸை பெற்று இருப்பீர்கள். நம் அனைவருக்கும் இந்திய அரசாங்கம் கொடுத்த தீபாவளி போனஸ், எரிபொருள்களின் விலை குறைப்பு. ஒன்றிய அரசாங்கம் கடந்த நவ.4ஆம் தேதி முடிந்த தீபாவளியை முன்னிட்டு பெட்ரோலின் விலையில் ரூ.5 ஐயும், டீசலில் ரூ.10 ஐயும் குறைத்திருந்தது.

இந்த அறிவிப்பு கடந்த சில மாதங்களில் பெட்ரோல் & டீசல் விலைகளில் கொண்டுவரப்பட்ட அதிகப்படியான விலை உயர்வுகளினால் சிக்கி தவித்துவந்த வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலை அளித்தது. ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, சில மாநில அரசுகளும் பெட்ரோல் & டீசல் மீதான தங்களது வாட் வரியை குறைப்பதாக அறிவித்துள்ளன.

இருப்பினும் மறுப்பக்கம் இந்த அறிவிப்புகள் கேலி, கிண்டல்களுக்கும் நெட்டிசன்கள் மத்தியில் ஆளாகியுள்ளன. ஏனெனில் சமீபத்திய விலை குறைப்பு மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம் என்கிற சூழல் தான் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறும் எரிசக்தி நிபுணர் நரேந்திர தஞ்சே சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மேலும் பேசுகையில், "தேவை மற்றும் விநியோகத்தில் ஏற்றதாழ்வு ஏற்படும் போதெல்லாம் விலைகள் அதிகரிக்கப்படும். இரண்டாவது காரணம், சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க / பசுமை ஆற்றல் துறைகளை ஒன்றிய அரசாங்கம் ஊக்குவிப்பதால் எண்ணெய் துறையில் முதலீடு இல்லாதது.

வரும் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கப்பட உள்ளது. 2023ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெயின் விலை ரூ.100 வரையில் உயர்த்தப்படலாம்" என்றார். வெளிநாட்டு சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுள் ஒன்றாக நம் இந்தியா உள்ளது.

உள்நாட்டு தேவைக்கான சுமார் 86% கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியின் மூலமாக பெறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு நிர்ணயிக்கப்படும் விலை தான், மற்ற காரணிகளை காட்டிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் & டீசல் விலைகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

OPEC (பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு) சமீப காலமாக அடிக்கடி கச்சா எண்ணெயின் விலையை உயர்த்தி வருகிறது. இந்த பணவீக்க அழுத்தத்திற்கு, OPEC-ஐயும், அதன் நட்பு நாடுகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். தற்சமயம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 80 அமெரிக்கன் டாலர்களாக உள்ளது.

2022 ஜூன் மாதத்தில் இந்த விலை 120 அமெரிக்கன் டாலர்களை தொடும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது. எனவே, இந்தியா உட்பட பல நாடுகளில் எரிபொருள் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரடியாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. கோவிட்-19 தொற்றுநோயின் மோசமான நிலையில் இருந்து தற்சமயம் படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இந்தியா உள்பட உலக நாடுகள் வருவாய் சேகரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகின்றன.

ஆனால் அதிக எரிபொருள் விலைகள் பணவீக்க அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. இது சிறப்பான பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்காது. எரிபொருள் விலை உயர்வுகளில் இருந்து மீள்வது என்பது சாத்தியமற்றது. ஏனெனில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும். அதற்கேற்ப பெட்ரோல் & டீசல் விலைகளும் அதிகரிக்கும்.

இதை தடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால் இந்த பிரச்சனையில் தப்பிப்பதற்கு மாற்று வழி உள்ளது. அதுதான் பசுமை போக்குவரத்து. மின்மயமாக்கப்பட்ட வாகனங்களுக்கு மாறுவதினால் எரிபொருள் விலை உயர்வுகளில் இருந்து தப்பிக்கலாம். இதனை புரிந்துக்கொண்ட ஆளும் ஒன்றிய அரசாங்கம் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பையும், விற்பனையையும் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








