ஆன்லைன் டாக்ஸி டிரைவர்களிலும் நல்லவங்க இருக்காங்கப்பா...!! இணையத்தில் பலரது மனதை கொள்ளையடிச்சுட்டாரு!
பெங்களுரில், தனது காரில் பயணித்த வாடிக்கையாளர் சோர்வாக இருந்ததை அடுத்து, அவரை ஓட்டலுக்கு அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்த உபெர் டாக்ஸி டிரைவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். யார் இவர்? எதற்காக இவ்வாறு செய்தார்? என்பது குறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நம்மில் பெரும்பாலானோர் நிச்சயம் உபெர் அல்லது ஓலா கார் டாக்ஸி சேவைகளை பயன்படுத்தி இருப்போம். இவ்வாறான ஆன்லைன் டாக்ஸி சேவைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு வரையில், அருகில் ஒருவர் டாக்ஸி வைத்திருப்பார் அவரை ஒருவர் சென்று அழைத்தால், அவர் தனது காருடன் வருவார். அதன்பின் போனில் அழைக்கும் வசதி வந்தது.

மொபைல் போனில் நேரடியாக டிரைவரையோ அல்லது டாக்ஸி சேவையை நடத்தும் நிறுவனத்தையோ தொடர்பு கொண்டு பயணம் செய்தவற்கான காரை வரவழைக்கலாம் என இருந்தது. அந்த சமயங்களில், காரை இயக்கிவரும் டிரைவர் சற்று நேரத்திலேயே பயணிகளுடன் இணக்கமாகி, சில பல அட்ஜெஸ்ட்மெண்ட்களை செய்யும் அளவிற்கு பழக்கமாகி விடுவார்.

ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் எல்லாமே இணையமாகிவிட்டதால், சில சமயங்களில் நாம் டிரைவரின் முகத்தை கூட பார்க்காமல் காரில் ஏறி, இறங்கிவிடுகிறோம். அதாவது, டிரைவருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான பிணைப்பு தற்போதைய மாடர்ன் காலத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், தான் அத்தகைய டாக்ஸி டிரைவர்களுள் ஒருவர் கிடையாது என்பதை பெங்களூருவில் ஒபெர் டிரைவர் ஒருவர் சொல்லாமல் சொல்லியுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்வது சொகுசானதாக மற்றவர்களால் பார்க்கப்பட்டாலும், பயணம் செய்தவர்களுக்கே விமான பயணத்தால் ஏற்படும் சோர்வு தெரியும். தரையில் இருந்து 30,000- 40,000 அடி உயரத்தில் பயணிப்பது, போதிய தூக்கமின்மை உள்ளிட்டவை விமான பயணத்தில் சோர்வு ஏற்படுவதற்கு காரணங்களாகும்.

அவ்வாறு டெல்லியில் இருந்து விமானத்தில் பயணித்துவிட்டு ஹார்ஷ் சர்மா என்பவர் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து தனது இருப்பிடத்திற்கு செல்வதற்கு உபெர் செயலியில் கார் டாக்ஸியை புக் செய்ய, அப்போதுதான் அவரை அழைத்து செல்ல இந்த கதையின் ஹீரோ வந்துள்ளார். ரவி என பெயர் கொண்ட தென்னிந்தியாவை சேர்ந்த அந்த உபெர் டாக்ஸி டிரைவர் பின் இருக்கையில் ஹார்ஷ் சர்மா சற்று சிரமப்பட்டு உறங்கி கொண்டுவருவதை கண்டுள்ளார்.

இதனால் காரை சாலையின் ஓரமாக நிறுத்திய டிரைவர் ரவி பின் இருக்கைக்கு சென்று இருக்கைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி ஹார்ஷ் சர்மா சவுகரியமாக உறங்குவதற்கு வழிவகை செய்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, காலை உணவு சாப்பீட்டீர்களா? என கேட்ட உபெர் டிரைவர், ஹார்ஷ் சர்மா இல்லையென சொன்னதும், "நீங்கள் உறங்குங்கள், நான் நல்ல உணவகமாக பார்த்து நிறுத்துகிறேன்" என கூறி காரை மீண்டும் இயக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் பின்னர் ஹார்ஷ் சர்மா தனது லிங்கிடின் (LinkedIn) பக்கத்தில் பதிவிட, அந்த பதிவு தற்சமயம் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், கூட்டம் மிகுந்த ஒரு நல்ல உணவகத்தில் காரை நிறுத்திய பிறகு 1 மணிநேரம் கழித்து தன்னை டிரைவர் எழுப்பி, உணவகத்திற்குள் அழைத்து சென்று உணவு வாங்கி கொடுத்ததாக ஹார்ஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

அந்த உணவகத்தில் சப்ளையர்கள் கிடையாது. ஆதலால் டிரைவர் ரவியே ஹார்ஷ் சர்மாவிடம் மெனு கார்டை நீட்டி, தங்களுக்கு பிடித்த உணவை கூறுமாறு கேட்டறிந்து, தனக்கும் சேர்த்து உணவுகளை அவர்களது டேபிளுக்கு கொண்டுவந்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி உள்ளனர். உணவருந்திய பின்னர் இருவருக்கும் காஃபியையும் டிரைவர் ரவி தான் கொண்டுவந்துள்ளார்.

இந்த செயல்களினால் மனம் நெகிழ்ந்து போன ஹார்ஷ் சர்மா, "அவரை நான் 1 மணிநேரத்திற்கு முன்பாக தான் சந்தித்தேன். இருப்பினும் அவர் என்னை அவரது மகன் போல் பார்த்து கொண்டார். இத்தகைய நிகழ்வுகளை டெல்லியில் மிக அரிதாகவே காண முடியும். ஆதலால் எனக்கு அது புதுமையானதாக இருந்தது" என தனது லிங்கிடின் பதிவில் கூறியவர் இறுதியாக "தென்னிந்தியர்கள் மாணிக்கங்கள்" என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், உபெர் நிறுவனத்தை டேக் செய்து இந்த சூப்பர் ஹீரோவிற்கு எதாவது செய்யுங்கள் என கோரிக்கையையும் ஹார்ஷ் சர்மா விடுத்துள்ளார். பெரும்பாலும் ஆன்லைன் டாக்ஸிகளில் பயணிக்கும்போது இறங்க வேண்டிய இடத்திற்கு சற்று தூரம் கொண்டு சென்று விட வேண்டும் என்றாலே பல கேப் டிரைவர்கள் முடியாது என மறுப்பர். ஆனால் இந்த சூப்பர் ஹீரோ டிரைவர் தனது வாடிக்கையாளரின் சோர்வை போக்குவதற்காக கூடுதல் தூரத்திற்கு காரை இயக்கி சென்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications