அன்றாட தேவைக்கே திண்டாட்டம்... கார்களுக்கான முன்பதிவுகளை ரத்து செய்துவரும் வாடிக்கையாளர்கள்...
பொருளாதார நெருக்கடியால் கார்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலர் இஎம்ஐ என்ற மாதத்தவணையை செலுத்த முடியாததால் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்து வருவதாக ஆட்டோமோட்டிவ் டீலர்களிடம் இருந்து வெளிவந்துள்ள தகவல்களை எக்கானாமிக் டைம்ஸ் ஆட்டோ தனது தளத்தில் பதிவிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கில் தற்போது தான் சிறிய தளர்வு ஏற்பட்டு உள்ளதால் நாட்டில் உள்ள கார் டீலர்கள் ஒவ்வொருவராக தற்போது தான் தங்களது டீலர்ஷிப் ஷோரூம்களை திறந்து வருகின்றனர்.

இவ்வாறு ஆட்டோமொபைல் துறை மீண்டும் இயங்க ஆரம்பித்திருந்தாலும் இந்த 2020ஆம் வருடம் நிச்சயம் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கடினமான ஆண்டாக விளங்கும் என்பது உறுதி. ஏனெனில் டீலர்கள் ஊரடங்கிற்கு முன்னதாக கார்களை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி பணிகளை துவங்கியிருந்தாலும், புதிய ஆர்டர்கள் எதுவும் அடுத்த ஒரு மாதத்திற்கு வராது என்றே கூறப்படுகிறது.

இது ஒருபுறம் முன்பதிவு செய்தவர்களில் சிலர் பொருளாதார பிரச்சனையால் மாத தவணையை செலுத்த முடியாததால் தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துவருகின்றனர். இதுவும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியை கொடுக்கும். இதற்கெல்லாம் காரணமான கொரோனா வைரஸினால் பலர் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலையை தக்க வைத்து கொண்டுள்ளவர்களும் சம்பள குறைப்பை சந்திந்துள்ளனர். இதனால் தங்களது சேமிப்பு பணத்தை எடுத்து செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர், புதிய கார் மற்றும் பைக்கை வாங்குதல் அல்லது அவற்றை மாத தவணையின் மூலமாக ஆர்டர் செய்தல் போன்ற பொருளாதார சவால்களை தவிர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறித்த அச்சம் மற்றும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை கண்டறிவதில் தாமதம் உள்ளிட்டவைகளால் ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய சரிவு தொடர்ந்து நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 70 சதவீத புதிய கார்களின் விற்பனை, அதிகப்படியான கடன்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை சார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலமாக தான் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாகனங்களின் விற்பனை அடுத்த சில மாதங்களுக்கு பெரிய அளவில் இருக்காது என டீலர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாகவே இந்திய ஆட்டோமொபைல் துறை சுமார் வருடத்திற்கு மேலாக கடினமான பாதையை தான் கடந்து வந்து கொண்டிருந்தது. அதன்பின் கடந்த ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த புதிய மாசு உமிழ்வு விதியினால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது விற்பனை மாடல்களின் விலையை பிஎஸ்6 அப்டேட்டினால் கணிசமாக உயர்த்தி இருந்தன.

இதனால் புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் தற்சமயம் பொது மக்களிடம் குறைந்திருக்கும் என்று உறுதியாக கூறலாம். தயாரிப்பு நிறுவனங்களுக்கு இப்போது இருக்கின்ற ஒரே ஒரு சிறு ஒளி ஸ்டாக்கில் உள்ள பிஎஸ்4 வாகனங்கள் தான். ஏனெனில் தள்ளுபடிகளுடன் பிஎஸ்4 வாகனங்களை வாங்க சிலர் ஆர்வமாக இருக்கலாம்.

இதை கருத்தில் கொண்டு தான் உச்சநீதிமன்றம் ஊரடங்கு முடிவு வந்த பின்னும் சில நாட்களுக்கு பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்தல் மற்றும் பதிவு செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்யலாம் என சமீபத்தில் அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளை ரத்து செய்து வருவது முன்பதிவுகளை கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதிகம் பெற்ற நிறுவனங்களை தான் அதிகளவில் பாதிக்கும்.

இதன்படி பார்த்தால் கியா நிறுவனம் செல்டோஸிற்கு 50,000 முன்பதிவுகளையும், எம்ஜி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் அவற்றின் ஹெக்டர் மற்றும் புதிய க்ரெட்டா மாடல்களுக்கு 20,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது. இதனால் இவை தான் பெரிய அளவில் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








