எரிபொருளை சேமிக்க 'சைக்கிள் தினம்' அவசியம்: மோடி வலியுறுத்தல்!
எரிபொருளை சிக்கனப்படுத்த மாதத்தில் ஒரு முறையாவது கார்களை தவிர்த்து சைக்கிளில் அலுவலகம் செல்ல வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்திள்ளார்.
'வைப்ரண்ட் குஜராத்' வளர்ச்சி திட்டங்கள் குறித்த மாநாட்டில் நகர மேம்பாடு குறித்து மோடி பேசினார். அப்போது எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி பேசினார்.

இதுகுறித்து மாநாட்டில் அவர் பேசியதாவது," மாதத்தில் ஒரு நாளாவது சைக்கிள் தினத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த தினத்தில் அலுவலகம் மற்றும் பிற இடங்களுக்கு காரில் செல்வதை தவிர்த்து மக்கள் சைக்கிளில் செல்ல வேண்டும்.
சைக்கிளில் செல்வோர்க்கு எதுவாக நகரங்களில் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதும் அவசியம். இதன்மூலம், எரிபொருள் சேமிப்புக்கு வித்திட முடியும்.
இது புதிய திட்டம் அல்ல. டென்மார்க்கில் சைக்கிளில் செல்வதை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. மேலும், சைக்கிள் வாங்குவதற்கும் வரிச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
மேலும், முழு நிலவு தினத்தன்று தெருவிளக்குகளை அணைப்பதன் மூலமும் மின் சிக்கனத்தை பெறலாம். இதற்கு பெரிய முயற்சிகள் எல்லாம் தேவையில்லை," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








