கொரோனாவுக்கு மத்தியில் இது வேறயா... டவ்-தே புயலால் கப்பல் மூழ்கியதில் 37 பேர் பலி- 38 பேர் கதி என்ன?
கொரோனாவின் இரண்டாவது அலையால் பலர் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டிற்குள்ளேயே முடக்கியுள்ளனர். நேற்றோ அல்லது இன்றோ இந்த நிலைமை கிடையாது, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இதே நிலை தான்.

இது ஒருபுறம் இருக்க, அதிதீவிர புயலாக மையம் கொண்டிருந்த டவ்-தே சமீபத்தில் குஜராத், மஹாராஷ்டிரா என இந்தியாவின் மேற்கு மாநிலங்களை பந்தாடி சென்றுள்ளது. இது அந்த மாநில மக்களுக்கு மேலும் ஒரு துயரத்தை உருவாக்கியுள்ளது.

இந்த புயலினால் மின்சாரம் இல்லாமல், போதிய தண்ணீர் வசதி இல்லாமல், பசியால் மக்கள் போராடிவரும் நிலையில், டவ்-தே புயல் கோரத்தாண்டவம் ஆடியதில் அரபி கடலில் ஓ.என்.ஜி.சி-க்கு சொந்தமான எண்ணெய் துரப்பண கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.

இதில் இந்த கப்பலில் இருந்த 37 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன 38 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலினால் கப்பலின் நங்கூரங்கள் அறுப்பட்டதில் கப்பல் ஒரு பக்கமாக கடலுக்கு இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த கப்பலிலும் அருகில் இருந்த கப்பல்களிலும் தங்கி பணிபுரிந்து வந்த 800க்கும் அதிகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒரே கப்பலில் இருந்த 37 பேர் கடலில் மூழ்கி மரணம் அடைந்திருப்பது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்தீவுகள் அருகே அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த 17ஆம் தேதி குஜராத்தில் கரையை கடந்தது. இந்த புயலினால் மஹாராஷ்டிரா, குஜராத் மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கேரளாவில் டவ்-தே புயலால் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்கள் மிக மோசமான பாதிப்பை சந்திள்ளன.

மும்பையில் 70 சதவீத மரங்கள் முறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் டவ்-தே புயலின் சீற்றத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வருடங்களுக்கு பிறகு குஜராத்தில் இவ்வாறு தீவிரமான புயல் தாக்கி சென்றுள்ளது.

மின்சார துண்டிப்பால் குஜராத்தில் பல மாவட்டங்களில் செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பார்வையிட்டுள்ளார். நமது தமிழகத்தில் கூட மேற்கு மாவட்டங்கள் சிலவற்றில் மழை வெளுத்து வாங்கியது.


Click it and Unblock the Notifications








