இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல... டவ்-தே புயலின்போது, தாமாகவே தற்கொலை செய்து கொண்ட போர்ஷே கார்!!
இந்தியாவின் மேற்கு மாநிலங்களை பந்தாடிவிட்டு ஒரு வழியாக டவ்-தே புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயல் கரையை கடந்த போது அதிகப்பட்சமாக மணிக்கு 108கிமீ வேகத்தில் காற்று வீசியதாக மும்பை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டவ்-தே புயல் உண்மையில் நாம் எதிர்பார்த்ததை காட்டிலும் வலுவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அதிக வேகத்தில் வீசிய காற்றினால் பல மின் கம்பங்கள், கட்டடங்கள் என வீட்டிலும், சாலைகளிலும் நிறித்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கூட ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.

இந்த வகையில் டவ்-தே புயலினால் சேதமடைந்த போர்ஷே 718 பாக்ஸ்டர் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சேதமடைந்த இந்த விலையுயர்ந்த போர்ஷே காரின் படங்கள் இன்று காலையில் இருந்தே இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த படங்களை காரின் உரிமையாளர் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நேற்று இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் தங்களது போர்ஷே கார் நனைத்து கொண்டிருப்பதாக வாட்ச்மேனினிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறும் அவர், அதனை தொடர்ந்து கீழே சென்று காரை பார்த்துள்ளார்.
போர்ஷே 718 பாக்ஸ்டர் காரில் தேவைக்கு ஏற்றாற்போல் திறந்து மூடும் வசதி கொண்ட மேற்கூரை வழங்கப்படுகிறது. இந்த காரை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பெரும்பாலும் மேற்கூரையை மூடி தான் வைத்திருப்பார்கள்.

இவரும் அவ்வாறு தான் மேற்கூரையை மூடி வைத்திருந்துள்ளார். ஆனால் அதிக வேகத்தில் வீசிய காற்றினால் மேற்கூரை தாமாகவே திருந்துள்ளது. இதனை வாட்ச்மேன் பார்த்துள்ளார். காற்றுடன் மழையும் பெய்ததால் காரின் உட்புறம் முழுவதும் நனைத்துவிட்டது.

இதில் காரின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் பாதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் திரையில் "சிஸ்டம் எரர்" என அந்த சமயத்தில் காட்டப்பட்டு இருந்ததாக உரிமையாளர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இருப்பினும் மேற்கூரையை மூடியாக வேண்டுமே.

இதனால் தனது சாவியை ஓட்டுனரிடம் கொடுத்து மேற்கூரையை மூட சொல்லியுள்ளார் உரிமையாளர் ருஷிந்த்ரா. அப்போதுதான் அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விஷயம் ஒன்று நடக்கிறது. ஓட்டுனர் சாவியை கொடுத்து காரை ஸ்டார்ட் செய்தவுடன் அது முழு வேகத்தில் அருகில் இருந்த சிமெண்ட் பில்லரில் பலமாக மோதியுள்ளது.

இப்படி நடக்கும் என்று அங்கிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உரிமையாளரும், ஓட்டுனர் வெறுமனே சாவியை மட்டுமே கொடுத்து காரை ஸ்டார்ட் செய்தார், நான் பார்த்தேன் என வீடியோவில் தெரிவித்துள்ளார்.

பிறகு எவ்வாறு கார் முன்னோக்கி அதி வேகத்தில் இயங்கியது என தெரியவில்லை. உலகில் வேறெங்கும் இதுபோல் நடந்ததை நான் கண்டதும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை என ருஷிந்த்ரா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பிறகு அவரே, மேற்கூரை தானாக திறந்ததினால் கேபினுக்குள் சென்ற மழை நீர், இன்ஸ்ட்ரூமெண்ட் அமைப்பிலும் நுழைந்திருக்க வேண்டும், இதன் விளைவாகவே கார் சாவி கொடுப்பதற்கு முன்பே கியரில் இருந்துள்ளது என்பதை அறிந்து கொண்டுள்ளார்.

இதற்கு இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற முயற்சித்து வருவதாக வீடியோவில் ருஷிந்த்ரா தெரிவித்துள்ளார். இதற்கு எப்படியோ பல மாதங்கள் ஆகலாம். அதற்கும், இந்த விபத்து காரின் கோளாறின் காரணமாகவே நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சிசிடிவி வீடியோ தேவை.

ஆனால் அவ்வாறான வீடியோ எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. சிசிடிவி வீடியோவை அக்கம் பக்கத்தினரின் வீட்டில் இருந்து பெற ருஷிந்த்ரா முயற்சித்து வருகிறார். எப்படியிருந்தாலும் இந்த காரை மீண்டும் பயன்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமாகும்.


Click it and Unblock the Notifications








