பச்ச கொழந்தய வெச்சுகிட்டு அப்பா செய்ற காரியமா இது! வீடியோவை பாத்துட்டு கண்டபடி திட்டும் நெட்டிசன்கள்!
நமது வாழ்க்கையில் ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலை தளங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் பல்வேறு புதுமையான விஷயங்களை செய்து வருகின்றனர்.
நம்மை நிறைய பேர் பின் தொடர வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான் இதற்கு காரணம். இதில் ஒரு சிலர் செய்யும் விஷயங்கள் பாராட்டை பெறுகின்றன. ஆனால் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக வேறு சிலர் செய்யும் ஒரு சில விஷயங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி விடுகின்றன. இந்த வகையில் புதிதாக பிறந்த குழந்தையை கையில் வைத்து கொண்டு ஒருவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருத்விக் பட்டேல் என்பவரால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நாம் பார்க்கும் காட்சிகள் அதிர்ச்சிகரமானதாக உள்ளன. இந்த வீடியோவில் தோன்றும் நபர்தான் ருத்விட் பட்டேல் என கூறப்படுகிறது. அவர் தனது கையில் புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை வைத்துள்ளார். வீடியோவின் தொடக்கத்தில் குழந்தை அழுது கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
அப்போது குழந்தையை வைத்திருக்கும் நபர், பைக் ஒன்றை ஸ்டார்ட் செய்கிறார். அது மிகவும் விலை உயர்ந்த டுகாட்டி பனிகேல் வி4 (Ducati Panigale V4) பைக் ஆகும். பைக்கை ஸ்டார்ட் செய்த பிறகு, அந்த நபர் நியூட்ரல் கியரில் போட்டு விட்டு, ஆக்ஸலரேட்டரை முறுக்குகிறார். அப்போது சத்தம் வர வர குழந்தை, அழுகையை நிறுத்தி விட்டது.
''இது நிச்சயமாக எனது மகன்தான். தந்தை-மகன் மோட்டார்சைக்கிள் சாகசங்கள் விரைவில் வரும்'' என இந்த வீடியோ பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சைலென்சர் சத்தத்தை கேட்டு அழுகையை நிறுத்தியதால், தன்னை போலவே தனது மகனும் பைக்குகளை நேசிக்க கூடியவராக இருப்பார் என்ற எண்ணத்தில் இந்த கருத்து பதிவிடப்பட்டிருக்கலாம். DNA டெஸ்ட் தேவையில்லை என்பது போன்று, ஒரு சிலர் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான கமெண்ட்களை வழங்கி வருகின்றனர்.
ஆனால் வேறு ஒரு சிலரோ இது மிகவும் தவறான விஷயம் என கூறி கொண்டுள்ளனர். அதிகப்படியான சத்தம் குழந்தையின் காதுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதுதான் இதற்கு காரணம். இந்த சம்பவம் நிகழந்தபோது, பைக் ஒரு அறைக்குள் நிறுத்தப்பட்டிருந்தது. எனவே 'எக்கோ' காரணமாக அதிகப்படியான சத்தம் எழுகிறது. இதுதவிர அந்த பைக்கில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர் பொருத்தப்பட்டிருப்பதை போல் தெரிகிறது.
அதிக சத்தம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. நமது காதுகளுக்கே இது மிகவும் அதிகமான சத்தம்தான். குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். 80 டெசிபலுக்கு மேலான சத்தம் கூட குழந்தைகளின் காதுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காது கேட்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் 120 டெசிபல் வரை சத்தம் எழுப்ப கூடியவை.
எனவேதான் இதுபோன்ற செயல்களை செய்ய கூடாது என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இந்த வீடியோ (Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral) ஆகி வருகிறது. இன்ஸ்டாகிராமிலேயே லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை 'லைக்' செய்துள்ளனர். ஆனால் புதிதாக பிறந்த குழந்தையை வைத்து கொண்டு நீங்கள் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம்.


Click it and Unblock the Notifications








