ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்பட வெச்சிட்டாரு!! இந்த சின்ன வயசில் எவ்வளவு பெரிய சாதனை!
டக்கார் ராலி (Dakar Rally), உலகின் கடினமான மோட்டார் ராலி பந்தயம். சவுதி அரேபியாவில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான டக்கார் ராலியின் 2வது கிளாஸில் கேரளாவை சேர்ந்த டிவிஎஸ் ரைடர் ஹரித் நோவா (Harith Noah) பந்தயம் வென்றுள்ளார். இது மொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது.
உலகின் மிகவும் கடினமான மோட்டார்சைக்கிள் பந்தயங்களுள் ஒன்றாக டக்கார் ராலி பந்தயம் விளங்குகிறது. புதிய 2024ஆம் ஆண்டிற்கான டக்கார் ராலி பந்தயங்கள் 2 வாரங்களுக்கு முன் கடந்த ஜனவரி 5ஆம் தேதி சவுதி அரேபியாவில் துவங்கின. அமாஉரி ஸ்போர்ட் அமைப்பால் நடத்தப்பட்ட இது, டக்கார் ராலியின் 46வது எடிசன் ஆகும்.

மேலும், சவுதி அரேபியாவில் டக்கார் ராலி நடத்தப்பட்டது இது 5வது முறை ஆகும். இத்தனை முறை நடத்தப்பட்டு இருந்தாலும் டக்கார் ராலியை முதல்முறையாக இந்த 2024ஆம் ஆண்டில்தான் ஒரு இந்திய ரைடர் வென்றுள்ளார். இந்த ரைடரின் பெயர் ஹரித் நோவா, வயது 30. கேரளாவில் உள்ள ஷோரனூரை சேர்ந்தவரான இவர் ஒரு தொழில்முறை மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரைடர் ஆவார்.
டக்கார் ராலி 2024 பந்தயத்தின் 2வது கிளாஸில் ஹரித் ரோவா பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, பந்தயத்தில் வெற்றி கோடை 11வது இடத்தில் ஹரித் நோவா கடந்தார். இந்த பந்தயத்தின்போது, வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே டாப்-10 லிஸ்ட்டிற்கு வெளியே இவர் இருந்தார். டக்கார் ராலியில் ஒரு இந்திய ரைடர் இந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டது இதுவே முதல்முறை.

தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டாரின் ஸ்பான்சரில் 2024 டக்கார் ராலியின் 2வது கிளாஸில் ஹரித் நோவா கலந்துக் கொண்டார். இந்த கிளாஸில் ஒரு ஆட்டோமொபைல் வாகன உற்பத்தி நிறுவனம் சார்பில் கலந்துக் கொண்ட ஒரே ரைடர் ஹரித் நோவா ஆவார். பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ஷெர்கோவின் பைக்குகளை பந்தயத்தில் இவர் பயன்படுத்தினார்.
ராலிஜிபி (RallyGP) பந்தயங்களில் போட்டியிட மிகவும் அனுபவம் வாய்ந்த ரைடர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். சர்வதேச மோட்டார்சைக்கிளிங் சங்கங்களின் கூட்டமைப்பு அனுமதித்தால் மட்டுமே ரைடர்களால் டக்கார் ராலிஜிபி பந்தயங்களில் கலந்துக் கொள்ள முடியும். அந்த அளவிற்கு மிகவும் ஆபத்தான மற்றும் போட்டிமிகுந்த ராலி பந்தயம், டக்கார் ராலிஜிபி ஆகும்.

ஆனால், ஹரித் நோவா கலந்துக்கொண்ட ராலி 2 கிளாஸில் ராலிஜிபி ரைடர்கள் லிஸ்ட்டில் இல்லாதவர்களால் கூட கலந்துக் கொள்ள முடியும். இதனால், டக்கார் ராலி 2 கிளாஸ் பந்தயங்களிலும் கடுமையான போட்டி நிலவும். இருப்பினும், அத்தகைய பந்தயத்திலும் நமது இந்தியாவை சேர்ந்த ஹரித் நோவா பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
2024 டக்கார் ராலி பந்தயங்கள் துவங்கிய சில நாட்களிலேயே சில உடல்நல பிரச்சனைகள் ஹரித் நோவாவுக்கு ஏற்பட்டன. இதனால், முதல் வாரம் முழுவதும் இவரால் சரிவர போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால், அதற்கடுத்த வாரமே ஏற்றம் காண துவங்கிய ஹரித் நோவா, 48எச் க்ரோனோ ஸ்டேஜ்-6இல் 18வது பொசிஷனில் இருந்து 13வது பொசிஷனுக்கு முன்னேறினார்.

அதேபோல், ஸ்டேஜ் 8 மற்றும் ஸ்டேஜ் 10 என இரு ஸ்டேஜ்களில் முதல் இந்தியராக விரைவான ராலி 2 நேரத்தை செட் செய்தார். நடந்து முடிந்த ராலி 2 கிளாஸில் 2வது இடத்தை பிடித்த ரைடர் ரோமாயின் டுமோண்டியரை காட்டிலும் சுமார் 4 நிமிடங்கள் முன்னதாகவே வெற்றிக் கோடை ஹரித் நோவா கடந்துவிட்டார். டக்கார் ராலியில் ஹரித் நோவாவின் இதற்கு முந்தைய சிறந்த பொசிஷன் 20வது இடம் ஆகும். அப்போதும், முதல் இந்திய ரைடராய் அந்த இடத்தை ஹரித் நோவா பிடித்து இருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2023ஆம் ஆண்டு ஹரித் நோவாவுக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. இரு முக்கிய சிகிச்சைகளை கடந்த ஆண்டில் இவர் செய்துக் கொண்டார். இருப்பினும், அதற்கடுத்த 2024இல் முதல் மாதத்திலேயே மிக பெரிய பரிசு ஹரித் நோவாவுக்கு கிடைத்துள்ளது. இது உண்மையில், இந்தியராய் நாம் பெருமைப்பட வேண்டிய தருணம் ஆகும்.


Click it and Unblock the Notifications









