திருமணங்களில் கலக்கி கொண்டிருந்தது... டான்ஸ் ஆடும் காரை அதிரடியாக தூக்கிய போலீஸ்... ஏன் தெரியுமா?
திருமண நிகழ்ச்சிகளை கலக்கி கொண்டிருந்த நடனம் ஆடும் காரை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் காவல் துறையினர், நடனம் ஆடும் கார் என அறியப்படும் மிகவும் பிரபலமான மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். விதிமுறைகளை மீறி ஏராளமான மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டிருந்த காரணத்தால், தற்போது அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்ததுடன் மட்டுமல்லாது, அந்த காரின் உரிமையாளருக்கு 41,500 ரூபாயை காவல் துறையினர் அபராதமாகவும் விதித்துள்ளனர். வழக்கமான சோதனையின்போது இந்த காரை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது காவல் துறையினரிடம்தான் அந்த கார் உள்ளது. ஹிண்டன் விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் அந்த கார் பிடிபட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து அந்த காரை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். யாரோ ஒருவர் காரில் ஏராளமான மாடிஃபிகேஷன்களை செய்து அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிக்க விட்டு பொது சாலையில் ஸ்டண்ட்களை செய்து வருவதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பேரில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட ஸ்கார்பியோ எஸ்யூவியை பறிமுதல் செய்துள்ளனர். இந்த காரின் உரிமையாளர் காரை முழுவதுமாக மாடிஃபிகேஷன் செய்துள்ளார். பிரேக் மற்றும் ஆக்ஸலரேட்டரை வித்தியாசமான முறையில் பயன்படுத்தும்போது, கார் குதிக்கும் வகையில் சஸ்பென்ஸன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

அப்படி கார் குதிக்கும்போது நடனம் ஆடுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. நடனம் ஆடும் வகையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை, அதன் உரிமையாளர் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு வழங்கி வந்துள்ளார். நேரம் மற்றும் இடத்தை பொறுத்து 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சிகளில் பல்வேறு பாடல்களுக்கு இந்த கார் நடனம் ஆடும். இதன் மூலம் பார்வையாளர்கள் பலரை இந்த ஸ்கார்பியோ ஈர்த்து வந்தது. இதற்கிடையே இந்த வாகனத்தின் ஆவணங்கள் தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு சில ஆவணங்கள் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த பகுதியில் இது மட்டுமே நடனம் ஆடும் கார் என கூறி விட முடியாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்டண அடிப்படையில் வழங்குவதற்காக ஏராளமானோர் இதேபோல் கார்களை மாடிஃபிகேஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாகனங்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இந்தியாவை பொறுத்தவரை வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது சட்ட விரோதமானது. எந்த வகையான மாடிஃபிகேஷன்களை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல் பலர் வாகனங்களை தொடர்ச்சியாக மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








