13,900 கிமீ இடைநில்லாமல் செல்லும் 'பெரிய' ரக தனிநபர் பயன்பாட்டு சொகுசு விமானம்... டஸ்ஸால்ட் அறிமுகம்
அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட பெரிய வகை தனிநபர் பயன்பாட்டு விமானத்தை டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்ட இந்த புதிய விமானத்தின் உருவாக்கப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் விபரங்களை டஸ்ஸால்ட் வெளியிட்டுள்ளது.

ஃபால்கன் 10எக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விமானம் பெரும் பணக்காரர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில், பெரிய கேபின் மற்றும் அதிக தூரம் பயணிக்கும் திறனுடன் வந்துள்ளது.

இந்த புதிய ஃபால்கன் 10எக்ஸ் விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் பியர்ல் 10எக்ஸ் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18,000 பவுண்ட் த்ரஸ்ட் விசையை வழங்க வல்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் முழுமையாக எரிபொருள் நிரப்பி இயக்கும்போது 13,900 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் செல்ல முடியும். உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து வடமேற்கு ஆஸ்திரேலியாவிற்கு இடைநில்லாமல் 15 மணிநேரத்தில் சென்றுவிடும். மணிக்கு 1,104 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது.

பிசினஸ் ஜெட் ரகத்திலான விமானங்களில் பெரிய அளவிலான கேபின் இடவசதியுடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 9.1 அடி அகலமும், 6.6 அடி உயரமும் கொண்ட கேபினை பெற்றுள்ளது.

அதேபோன்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு உட்புறத்தில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து கொள்ள முடியும். ஸ்டான்டர்டு மாடலில் சொகுசான இருக்கைகள், கட்டில் வசதிகள் கொடுக்கப்படுகின்றன.

அடிக்கடி வியாபார விஷயமாக வெளிநாடுகளுக்கு பறக்கும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு இந்த பிசினெஸ் ஜெட் மிகச் சிறப்பானதாக இருக்கும். மேலும், அதிர்வுகள் குறைவான மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக டஸ்ஸால்ட் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் 38 ஜன்னல்கள் கொடுக்கப்பட்டு இருப்பதோடு, இதன் ஜன்னல்கள் ஏற்கனவே உள்ள ஃபால்கன் 8எக்ஸ் விமானத்தைவிட 50 சதவீதம் அளவுக்கு பெரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை சிறிய விமான நிலையங்களில் இருந்தும் இயக்கும் வகையில் இதன் வடிவமைப்பும், எஞ்சின்களும் கொடுக்கப்பட்டு இருப்பதாக டஸ்ஸால்ட் தெரிவிக்கிறது. கார்பன் காம்போசிட் உதிரிபாகங்கள் மூலமாக எடையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் காக்பிட் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பைலட்டுகள் எளிதாக கட்டுப்படுத்தும் வகையில் இருப்பதுடன், இதன் பைலட் இருக்கைகள் படுக்கை போல மாற்றிக் கொள்ளும் வசதியை பெற்றிருக்கிறது. ஒரு பைலட் விமானத்தை இயக்கும்போது மற்றொரு பைலட் படுத்து ஓய்வு எடுக்க முடியும்.

ராணுவ விமானங்களில் உள்ளது போன்று, இரண்டு எஞ்சின்களையும் ஒரே த்ராட்டில் கன்ட்ரோல் மூலமாக இயக்கும் வகையில் தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. இதன் எஞ்சின்கள் மற்றும் கன்ட்ரோல் யூனிட் இணைந்து நிர்ணயிக்கப்படும் விசையை தானியங்கி முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்.

இந்த விமானத்தில் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இருப்பதால் அவசர காலத்திலும் விபத்தை தவிர்த்து எளிதாக தரை இறக்க முடியும். வரும் 2025ம் ஆண்டு இந்த விமானம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








