தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர் அலங்காரத்தில் ஜொலிக்கும் சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில்!
ஆண்டுதோறும் சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடக்கும். குறிப்பாக, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சாலைகள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தீபாவளி வாழ்த்து பலகைகளாலும் கண்களை பறிக்கும்.
அதேபோன்று, அங்கு இயக்கப்படும் பஸ்களிலும் தீபாவளி வாழ்த்து செய்தியுடன் வலம் வரும். இந்தநிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, இந்த ஆண்டு புதிய எம்ஆர்டி ரயில் ஒன்றை அந்நாட்டு போக்குவரத்து துறை அறிமுகம் செய்திருக்கிறது.

அந்த ரயில் முழுவதும் தீபாவளி வாழ்த்தையும், அதன் உற்சாகத்தையும் பரைசாற்றும் விதத்தில் ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விஷயங்களுடன் அந்த ரயில் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

தாமரை பூக்கள், மயில் மற்றும் இந்திய ஆபரண வகைகளுடன் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அந்த எம்ஆர்டி ரயில் கவர்ச்சியாக இருக்கிறது.

அடுத்த மாதம் வரை இந்த ரயில் லிட்டில் இந்தியா வழியாக செல்லும் வட-கிழக்கு எம்ஆர்டி ரயில் பாதையில் இயக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுமட்டுமல்ல, ரயில் நிலையத்திலும் தமிழில் தீபாவளி வாழ்த்து பலகை வைக்கப்பட்டு, ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலும், ரயில் நிலையமும் பார்ப்போரை கவர்ந்திழுப்பதுடன், சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை களைகட்ட செய்திருக்கிறது.

கடந்த 1987ம் ஆண்டு சிங்கப்பூர் எம்ஆர்டி ரயில் சேவை துவங்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர் போக்குவரத்தின் முதுகெலும்பாக மாறியிருக்கிறது. தற்போது தினசரி 3 மில்லியன் மக்கள் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

அந்நாட்டின் பிராமினேட் எம்ஆர்டி ரயில் நிலையம் பூமியில் 43 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கன்வேயர் பெல்ட் 35 மீட்டர் ஆழத்திற்கு செல்கிறது. மிக நீண்ட நகரும் படிக்கட்டு அமைப்பாகவும் கருதப்படுகிறது.

சிங்கப்பூரின் டூவாஸ் கிரெஸென்ட் எம்ஆர்டி ரயில் நிலையம் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் ஒன்று. மேலும், வாகனங்கள் செல்லும் பாலத்தின் நடுவில் ராட்சத தூண்களுடன் இந்த ரயில் பாதை அமைப்பு கட்டப்பட்டுள்ளது.

ராஃப்ல்ஸ் எம்ஆர்டி ரயில் நிலையம் மக்கள் வெளியேறுவதற்கான மிக அதிக வழிகளை கொண்டதாக இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் 10 வழிகள் உள்ளன.

கல்டிகாட் மற்றும் பாட்டனிக் கார்டன்ஸ் இடையிலான எம்ஆர்டி ரயில்கள் மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன. மிக அதிக வேகத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகளில் இதுவும் ஒன்று.

அடுத்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள எந்தவொரு இடத்திலிருந்தும் 15 நிமிட நடை பயணத்தில் மெட்ரோ ரயிலை பிடித்துவிடலாம். இதற்காக, மிக சிறப்பான திட்டமிடலுடன் பணிகள் அங்கு சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








