டெல்லி காற்று மாசு... பிற பெருநகரங்களுக்கு கற்றுத் தரும் பாடம்!!
டெல்லியில் காற்றுமாசு அபாய கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், அந்த நகர் படும் பிரச்னைகளிலிருந்து பிற நகரங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் எவை என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் வைரலாக பரவியது.

கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனங்களில் பயணித்தவர்கள், காயங்களுடன் தப்பினர். குளிர்காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் அங்கு சகஜம்.

ஆனால், அங்கு தற்போது பகல் வேளைகளிலேயே பனிமூட்டமும், புகைமூட்டமும் சேர்ந்து கொண்டு மக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது. டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டியிருப்பதே மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிகபட்ச அளவைவிட பன் மடங்கு கூடுதலான அளவில் அங்கு காற்று மாசுபாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளிக்கூடங்கள் கூட மூடப்பட்டன. இந்த சூழலில், டெல்லியை சுற்றி உள்ள மாநிலங்களில் கோதுமை வயல்களில், அடித்தாள் தீ வைத்து எரிக்கப்படுவதும், வாகனப்புகையும் காற்று மாசுபடுவதற்கும், புகைமூட்டத்திற்கும் காரணமாக கூறப்பட்டது.

கோதுமை வயல்களில் அடித்தாள்களை தீயிட்டு எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்டை மாநில அரசுகளை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
Recommended Video


அத்துடன், டெல்லியில் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையை கட்டுப்படுத்துவதற்காக ஒற்றைப்படை, இரட்டைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அனுமதிக்கவும் முடிவு செய்தார். இந்த முறைக்கு ஏற்கனவே ஓரளவு பலன் கிட்டியதால், மீண்டும் அதே திட்டத்தை கையில் எடுத்தார்.

ஆனால், இந்த முறையில் அடுத்து ஒரு இடையூறு ஏற்படுகிறது. அதாவது, ஒரு கார் வைத்திருப்பவர்கள், மற்றொரு காரையும் வாங்கி பயன்படுத்த துவங்கி இருப்பதாகவும், இதனால், புதிய வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக உயரத் துவங்கிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வாகனப் புகை குறைவதற்கு பதிலாக தொடர்ந்து அதேநிலை நீடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறி கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று நீதிமன்றம், அதற்கு தடையும் போட்டது.

இந்த சூழலில், குளிர்காலத்தில் பொதுவாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவும், பனிமூட்டமும் நிலவும். தற்போது வாகனப் புகை, கோதுமை அடித்தாள் எரிப்பதால் ஏற்படும் புகை மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையும் சேர்ந்து காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது.

டெல்லியில் கார்கள் அதிகம், குளிர்காலத்தில் இந்த பிரச்னை எழுவது வாடிக்கை என்று கருதி விட்டு விட முடியாத அளவுக்கு பிரச்னை தீவிரமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் பெருகி வரும் வாகனங்களால் டெல்லி போன்றே நாட்டின் இதர பெருநகரங்களிலும் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டும் ஆபத்து உள்ளது.

அதே அளவுக்கு தொழிற்சாலை கழிவுகளும், மக்கள் பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் மாசு தீங்குகளும் வரும் காலத்தில் பெரு நகரங்களின் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இதே நிலை நீடித்தால், வாழத் தகுதியில்லாத நகரங்களில் பட்டியலில் இந்தியாவின் பெருநகரங்கள் கூடிய விரைவில் இடம்பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

டெல்லியில் காற்று மாசுவை தடுக்க அம்மாநில அரசு தவித்து வரும் நிலையில், இதிலிருந்து பிற மாநில அரசுகள் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. பல வெளிநாடுகளில் காற்று மாசுபடுவதை தீவிரமாக கண்காணித்து அதற்கு தக்கவாறு பல சிறப்பான திட்டங்கள் கையாளப்படுகின்றன.

ஆனால், நம் நாட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத நிலையில், பெருநகரங்களில் காற்று மாசு அபாயகரமான அளவை நெருங்கிவிட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் போன்ற புகையில்லா, பொது போக்குவரத்து கட்டமைப்பை மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் மிகச் சிறப்பான மெட்ரோ ரயில் போக்குவரத்து கட்டமைப்பு இருந்தும், வாகனங்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே, பெருநகரங்களில், புதிய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது.

தவிர, குறைவான நச்சுப் புகையை வெளியிடும் வகையில் எரிபொருள் தரத்தை அதிகரிக்க வேண்டியதும் அவசியம். பிஎஸ்-5 மாசு தரக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் வாகனங்களை தயாரிக்க உத்தரவிடுவதும் ஓரளவு தற்காலிகமான பலன் தரும். இதனை அமலுக்கு கொண்டு வருவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும். பிரயோஜனம் குறைவு.

மற்றொரு புறம், பெட்ரோல், டீசல் வாகனங்களைவிடுத்து, மின்சார கார் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு அதிக சலுகைகள் வழங்குவதும், வாகன புகையால் மூச்சு திணறும் நகரங்களுக்கு சரியான தீர்வாகவும், முன்னெச்சரிக்கையான விஷயமாகவும் இருக்கும்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி, முன்னெச்செரிக்கை நடிவடிக்கைகளை எடுப்பதோடு, தொலைநோக்கோடு இந்த விஷயத்தில் திட்டஙகளை தீட்டுவதும் அவசியமாகிறது. இல்லையெனில், டெல்லியை விட மிக மோசமான நிலைக்கு பிற பெரு நகரங்களும் அடுத்த சில ஆண்டுகளில் தள்ளப்படும்.


Click it and Unblock the Notifications








