எந்த ஏர்போர்ட்டிலும் இனி இப்படியொரு சம்பவம் நடக்க கூடாது! சுற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்த விமானங்கள்!
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா சாட்ஸ் (Air India SATS) பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், ஆரம்பகட்ட தகவல்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கைகள், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.
சுருக்கமாக சிஎன்ஜி (CNG) எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு சிஎன்ஜி வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் டெல்லி விமான நிலையத்தில் ஏகப்பட்ட சிஎன்ஜி பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதில் ஒரு டாடா (Tata) சிஎன்ஜி பேருந்தில்தான் தற்போது தீப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு, பேருந்தின் சிஎன்ஜி என்ஜின் பெட்டியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-3 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் நல்ல வேளையாக பயணிகள் இல்லாத நேரத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்த டெல்லி விமான நிலையப் பேருந்து தீ விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் பல உள்ளன. இதுவரை அதிகாரபூர்வமான காரணம் அறிவிக்கப்படாத நிலையில், சில முக்கியக் காரணிகளை இனி ஆராயலாம். மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) குறிப்பிட்டுள்ளப்படி, தொழில்நுட்பக் கோளாறு என்பது மிகவும் உறுதியான காரணமாகத் தெரிகிறது.

வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு மின்சாரக் கசிவு ஒரு பொதுவான காரணம் என்பதால், அதுவும் இந்த சம்பவத்திற்கு ஒரு சாத்தியக்கூறாக விசாரிக்கப்பட்டு வருகிறது. பேருந்து சிஎன்ஜி மாடல் என்பதால், எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட கோளாறும் தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம். மேலும், இந்த டாடா பேருந்து ஒரு பழைய மாடல் என்பதால், வாகனத்தின் பராமரிப்பு நிலை மற்றும் அதன் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகள் எழுகின்றன.
எரிபொருள் அல்லது எண்ணெய் கசிவுகள், என்ஜின் பாகங்கள் மீது பட்டு தீப்பற்றுவது, வாகனத்தின் என்ஜின் பெட்டி தீப்பிடிப்பதற்கு முக்கியக் காரணமாகும். இந்த சம்பவத்தில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும், விமானத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்படுவது நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், விமானங்கள் ஆயிரக்கணக்கான கேலன் எரியக்கூடிய ஜெட் எரிபொருளை எடுத்துச் செல்கின்றன.

இதனால், விமானங்களுக்கு அருகில் ஏற்படும் இவ்வாறான பெரிய தீ, காற்றின் மூலமாக கூட விமானத்தின் எரிபொருள் டேங்கிற்கு பரவி, பெரிய வெடிப்புக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. தீ விபத்தினால் ஏற்படும் அதிக வெப்பம், விமானத்தின் அடிப்படை கட்டமைப்பை கூட சேதப்படுத்தலாம். கண்ணுக்குத் தெரியாத சேதம்கூட விமானத்தின் வலிமையை பாதிக்கலாம்.
விமானத்தின் அடியில் உள்ள முக்கியமான மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள் வெப்பத்தால் சேதமடையலாம் அல்லது முற்றிலுமாக அழியலாம். இது மிகவும் செலவுமிக்க பழுதுபார்ப்பு தேவைகளை ஏற்படுத்துவதுடன், பயணத்தின்போது எதிர்பாராத செயலிழப்புகளையும் ஏற்படுத்தலாம். மேலும், தீ மற்ற தள சேவை உபகரணங்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு வேகமாகப் பரவி, சேதத்தையும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

ஆதலால், ஒரு சிறிய தீ கூட அருகில் உள்ள வாயில்கள் அல்லது ரன்வேயை மூடச் செய்து, விமான தாமதங்கள், ரத்து செய்யப்படுதல் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க செயல்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்தலாம். மேலும், பேருந்தில் பயணிகள் இல்லாவிட்டாலும், பயணிகள் நிரம்பிய விமானத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டால், அது பீதியை ஏற்படுத்தி, அவசர கால வெளியேற்றத்தின்போது குழப்பத்தை உருவாக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான தீ விபத்துகள் பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் என்பதை தாண்டி, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் அணைக்கப்பட்டாலும் இவ்வாறான தீ விபத்துகள் நச்சு இரசாயனங்கள் மற்றும் புகையை வெளியிடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஆபத்தை உருவாக்குகின்றன. ஆதலால், இத்தனை பிரச்சனைகளை சந்திக்காமல் தவிர்க்க, வாகனங்களை அவ்வப்போது பழுதுப்பார்ப்பதும், அதையும் தாண்டி தீ விபத்துகள் நடக்குமேயானால் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிவது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









