எல்லாருக்கும் பயம் வந்திருச்சு... கார், பைக் சேல்ஸ் எகிறபோகுதாம்... களைகட்ட தொடங்கிய ஆர்டிஓ ஆபிஸ்கள்
ஊரடங்கு தளர்வால், ஆர்டிஓ அலுவலகங்களில் வாகன பதிவு பணிகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே அன்றைய தினத்தில் இருந்து வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறவில்லை. எனவே புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படாத காரணத்தால், ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயும் பாதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கடந்த மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது. ஆனாலும் மே மாதத்தில் வாகன விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இதனால் ஆர்டிஓ அலுவலகங்கள் களையிழந்து கிடந்தன. ஆனால் கடந்த ஜூன் மாதத்தில் ஓரளவிற்கு நிலைமை மேம்பட்டுள்ளது.

இதற்கு தலைநகர் டெல்லி ஒரு நல்ல உதாரணம். டெல்லியில் கடந்த ஜூன் மாதம் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு முந்தைய மே மாதத்தில் வெறும் 8,455 புதிய வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 23,940 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 18,741 இரு சக்கர வாகனங்களும் (மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள்), 4,755 நான்கு சக்கர வாகனங்களும் அடக்கம். இதுதவிர 74 மூன்று சக்கர வாகனங்களும் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்), 280 இ-ரிக்ஸாக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் கடந்த மே மாதம் 6,711 இரு சக்கர வாகனங்களும், 1,650 கார்களும், 7 மூன்று சக்கர வாகனங்களும், 72 இ-ரிக்ஸாக்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் இன்னமும் கோவிட்-19 வைரஸ் பிரச்னை ஏற்படுவதற்கு முந்தைய நிலைக்கு வாகன பதிவு திரும்பவில்லை. அவ்வளவு ஏன்? அதற்கு அருகில் கூட செல்லவில்லை.

கோவிட்-19 பிரச்னை ஏற்படுவதற்கு முன்னதாக டெல்லியில் ஒவ்வொரு மாதமும் சுமார் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரையிலான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய கார்களை வாங்க கூடிய அளவிற்கு பலரின் பொருளாதார நிலைமை இல்லை. எனவே நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால் பொது போக்குவரத்தை விட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே வரும் மாதங்களில் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட புதிய வாகனங்களின் விற்பனை நிச்சயமாக உயரும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் பலர் செகண்ட் ஹேண்ட் வாகனங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதன் காரணமாக செகண்ட் ஹேண்ட் வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்கள் மத்தியிலும் ஆவல் எழுந்துள்ளது. ஒருவேளை புதிய வாகனங்களை வாங்குவதாக இருந்தாலும், விலை குறைவான மாடல்களையே வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








