பெருந்தொகையை ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டம்... அட இதுதாங்க மக்களாட்சி!!
இதுதான் மக்களாட்சி என கூறும் வகையில் தலைநகர் டெல்லியில் அதிரடி நடவடிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகின்றார். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வருமானத்தை இழந்து தவித்து வரும் ஆட்டோ மற்றும் கால்டாக்சி டிரைவர்களுக்கு நிதியுதவி வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கோவிட்-19 வைரசால் எண்ணற்ற பிரச்னைகளை இந்தியா சந்தித்து வருகின்றது. நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்படவில்லை என்றாலும் ஏதேனும் ஓர் காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தாத மாநிலங்களிலும்கூட மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவாகியிருக்கின்றது.

குறிப்பாக தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை முழுமையாக தவிர்த்திருக்கின்றனர். இருப்பினும், ஒரு சிலர் மட்டும் தேவையில்லாமல் வெளியில் சுற்றி வருவதை நம்மால் காண முடிகின்றது.

ஆனால், பொது போக்குவரத்து வாகனங்கள் முழுமையாக முடங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இதனால், வாடகை ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக தொடங்கியிருக்கின்றனர். போதிய வருமானம் கிடைக்காததால் அன்றைய தினத்தை கடத்துவதற்கே அவர்கள் மிக சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இஎம்ஐ மற்றும் வாகன கடன் போன்றவற்றால் வாடகை வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வங்கி கணக்கில் ரூ. 5 ஆயிரம் செலுத்த திட்டமிட்டிருக்கின்றது.

வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களின் வறுமையைப் போக்கும் வகையில் இந்த நிதி உதவி திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்திருக்கின்றது. மே4ம் தேதியே இதுகுறித்த முடிவு எடுக்கப்பட்டநிலையில் தற்போது வாடகை வாகன ஓட்டுநர்களின் வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்ஜ் மற்றும் பர்மிட்டுகளைக் கொண்டிருக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களின் ஆதார்கார்டு சரிபார்க்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகின்றது. தற்போது டெல்லியில் மட்டும் 2.80 லட்சம் பிஎஸ்வி பேட்ஜ் வைத்திருப்பவர்களும், 1.90 லட்சம் பேர் பெர்மிட் வைத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.

இவர்களுக்கே ரூ.5000 ஆயிரம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கூறியதாவது, "முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டியிருப்பதால் நிதி உதவி சிலருக்கு அத்தியாவசியமாக மாறியுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "முழு ஊரடங்கினால் ஏற்படும் தாக்கங்களை கணிசமாக குறைக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், குறிப்பாக ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் உட்பட அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு இந்த அரசு உதவியாக நிற்கும்" என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு (2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோதும் இதேபோன்று டெல்லி அரசு ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு உதவியளிக்கும் வகையில் நிதித்தொகையை வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








