டெல்லியில் மீண்டும் தலைத்தூக்கும் காற்று மாசுப்பாடு!! பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த முதல்வர் வேண்டுகோள்!
இதுவரையில் நாம் கேட்டிராத கோரிக்கை ஒன்றை டெல்லி முதல்வர் தனது மக்கள் முன் வைத்துள்ளார். அப்படி என்ன அந்த கோரிக்கை? இந்த செய்தியில் பார்ப்போம்.

காற்று மாசுபடுதல் கடந்த சில வருடங்களாக டெல்லி அரசாங்கத்தின் மிக பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாநில அரசாங்கமும், முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவாலும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பெரியதாக எந்த நடவடிக்கையும் எடுப்பட்டதாக தெரியவில்லை. நிலைமை நாள் நாள் மோசமாகி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த பிறகே நாம் முக கவசத்தை அணிய ஆரம்பித்தோம். ஆனால் டெல்லிவாசிகள் அதற்கு முன்பு இருந்தே முக கவசத்தை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

கொரோனா பரவலால் நாடு தழுவிய ஊரடங்குகளினால் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடுதல் வெகுவாக குறைந்திருந்தன என அந்த இக்கட்டான சமயத்திலும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்திகள் வெளியாகின. ஆனால் அதன்பின், சில மாதங்களாக வீட்டிற்குள் முடங்கி கிடந்த மக்கள் வெளியே வர ஆரம்பித்ததால் மீண்டும் டெல்லியில் காற்றின் தரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

நாடு முழுவதும் பலரால் கவனிக்கத்தக்க விஷயமாக மாறி இருக்கும் டெல்லி காற்று மாசுப்பாட்டை குறைக்க கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காற்று மாசுவிற்கு எதிரான 22-நாள் தொடர் நடவடிக்கைகளை டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மேற்கொள்ள துவங்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகளில், கடந்த அக்.9 ஆம் தேதி மட்டும் 32 விதிமீறல்களுக்கு சுமார் ரூ.15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

வருகிற அக்டோபர் 29ஆம் தேதி வரையில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட உள்ள இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டெல்லி மாநகரத்திற்குள் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, அத்தகைய இடங்களில் இருந்து வெளிவரும் தூசி அளவை கண்காணிக்க 31 பேர் கொண்ட குழுவை டெல்லி அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, காற்று மாசுப்பாட்டை குறைக்க, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வாரத்திற்கு குறைந்தது ஒரு நாள் ஆவாது வெளியே எடுத்துவராமல் இருக்கவும் எனவும், முடிந்த வரையில் மெட்ரோ மற்றும் மாநகர பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் தன் மாநில மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பலர் பகிர்ந்து கொண்டு பயணம் செய்யும் ஷேரிங் ஆட்டோ & பைக் என்றால் கூட பரவாயில்லை என்கிறார் ஜெக்ரிவால். டெல்லியில் குறிப்பாக பனிக்காலத்தில் காற்று மாசு வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே இத்தகைய நடவடிக்கைகளை டெல்லி அரசு இந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் துவங்கியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளும் ஒரு முக்கியமான காரணமாகும். தனிப்பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்துவதை குறைப்பதால் காற்று மாசு குறைவது மட்டுமின்றி, எரிபொருளின் விலையும் கணிசமாக குறையும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் டெல்லியில் வசிப்போர் பசுமை டெல்லி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு, இதன் மூலம் காற்று மாசுவை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் மீறல்களை பற்றி தகவல்கள் தெரிவியுங்கள் எனவும் முதல்வர் அரவிந்த் ஜெக்ரிவால் மக்களை வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "உங்கள் கண் முன் காற்று மாசுவிற்கு ஆதரவாக நடக்கும் எந்தவொரு மீறல்களையும் - சாலையில் புகையை கக்கவிட்டவாறு லாரி ஒன்று செல்வதில் இருந்து காற்று மாசை வெளியிடும் தொழிற்சாலைகள், குப்பைகள் எரிக்கப்படுவது வரையில் எதை ஒன்றை பற்றியும் புகார் தெரிவிக்கலாம்" என கூறியுள்ளார்.

உலகின் அதிகளவில் மாசுப்பட்ட காற்றை கொண்ட நகரங்களில் நமது தேசிய தலைநகர் டெல்லி முன்னிலையில் உள்ளது. வருகிற தீபாவளி வாரத்தில் பட்டாசு கொளுத்துவதினால் ஏற்படும் மாசு இம்முறையும் டெல்லியில் இருந்து நமக்கு எச்சரிக்கை மணியை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








