டொயோட்டா ஃபார்ச்சூனர் காராலேயே முடியல... இது தேவைதானா!! ரூ.50,000 அபராதத்திற்கு உள்ளான டெல்லி தம்பதி!
லடாக் பகுதியில் மணல் பரப்பிற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை எடுத்து சென்று சிக்கிக்கொண்ட டெல்லி தம்பதிக்கு போலீஸார் அதிரடியாக ரூ.50,000-ஐ அபராதமாக விதித்துள்ளனர். இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2019இல் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக், மலைகளாலும், பிரம்மிப்பூட்டும் இயற்கை வளங்களினாலும் நிறைந்தது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதேநேரம் இந்த பகுதியில் பல இடங்கள் மணல்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆதலால் சாலையை தவிர்த்து லடாக்கின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு வாகனங்களில் செல்வது என்பது முடியாத காரியம்.

இருப்பினும் இயற்கையின் அழகை கண்டு உணர்ச்சிவசப்பட்ட பல சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை ஆஃப்-ரோட்டிற்கு எடுத்து சென்று சிக்கிக்கொண்ட சம்பவங்கள் பலவற்றை இதற்குமுன் பார்த்துள்ளோம். இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை மணற்பரப்பிற்கு எடுத்து சென்று சிக்கி கொண்டுள்ளனர்.

இதுதொடர்பான படங்களை தான் இங்கே காண்கிறீர்கள். இந்த படங்கள் லடாக் போலீசாரின் முகப்புத்தக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இதில் சம்மந்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு சட்ட விதிமுறைகளை மீறியதற்காக ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் லடாக் போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

லடாக்கில் உள்ள பாங்காங் டிசோ என்ற பிரபலமான ஏரிக்கு அருகே ஹண்டர் மணல் குன்றுகள் என்ற முற்றிலுமாக மணற்பரப்பால் சூழப்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. முற்றிலும் மணல்களால் நிறைந்த பகுதி என்பதால் ஹண்டர் மணல் குன்றுகளை ஒட்டகத்தின் மூலம் கடப்பதே சிறந்தது. அல்லது வெறும் கால்களால் கடக்கலாம். ஆனால் ஹண்டர் மணல் குன்றுகள் பெரிய அளவிலான பரப்பளவை கொண்ட பகுதி என்பதால், உள்ளூர்வாசிகள் ஒட்டகத்தையே பயன்படுத்துகின்றனர்.

மேலும், இந்த பகுதியில் காரில் பயணம் செய்வதற்கு தடை நீண்ட காலமாக அமலில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து லடாக் போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், "ஹண்டர் மணல் குன்றுகளுக்கு மேல் கார்களை ஓட்டக்கூடாது என்ற நுப்ரா பகுதியின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறிய சுற்றுலா வாகனம் ஒன்று கண்டறியப்பட்டது.

இதில் பயணித்த ஜெய்பூரை சேர்ந்த தம்பதியினர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இயற்கை நிலப்பரப்பை சேதப்படுத்தி மற்றும் தடை உத்தரவுகளை மீறி மணல் திட்டுகளில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று லே மாவட்ட காவல்துறை சுற்றுலா பயணிகளை கேட்டுக்கொள்கிறது" என பதிவிட்டுள்ளனர்.

இவ்வாறு இயற்கை வளங்களை பாதுகாக்கும் பொருட்டு லடாக் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளது. அவற்றை தவிர்க்க, இவ்வாறான பெரும் அபராதங்கள் அவசியமாகிறது. இத்தகைய செயல்களுக்கு போலீஸார் கவனிக்க மாட்டார்கள் என்ற அலட்சியம் மட்டுமின்றி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் மீது வைத்துள்ள அதிகப்படியான நம்பிக்கையையும் ஒரு காரணமாக சொல்லலாம்.

இந்த சம்பவத்தில் உட்பட்டிருப்பது டொயோட்டா ஃபார்ச்சூனரின் 4x4 வேரியண்ட்டா என்பது உறுதியாக தெரியவில்லை. 4x4 வேரியண்ட் இல்லையெனில் நிச்சயமாக அபராதத்திற்கு உள்ளாகி உள்ள தம்பதியினருக்கு காரை பற்றிய புரிதல் மிகவும் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கண்டிப்பாக 4X2 ட்ரைவ் அமைப்பு கொண்ட கார்களை கொண்டு செல்லவே கூடாது.

முன்னதாக இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதத்தில், ஆடி க்யூ3 சொகுசு காரில் இளைஞர்கள் சிலர் பாங்காங் டிசோ ஏரியில் வாகனம் ஓட்டியது இணையத்தில் வைரலானது. அப்போது காரில் 3 பேர் பயணம் செய்தனர். இதில் இருவர் காரின் சன்ரூஃப் மீது அமர்ந்தப்படியும் ஒருவர் காரை இயக்கப்படியும் இருந்தனர். கரையில் நின்றவாறு ஒருவர் இதனை காட்சிப்படுத்தி இருந்தார். மேலும், இவர்கள் ஏரியின் கரை பகுதியில் மேசை ஒன்றில் மதுப்பாட்டில்களை அடுக்கி வைத்திருந்தனர்.

இதனால் அவர்கள் அனைவரும் மது அருந்தி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே தவறு, இதில் பாங்காங் ஏரி போன்ற வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்ட பகுதியில் ஆக்ரோஷமாக காரை இயங்குவது அதனினும் தவறு. இத்தகைய செயல்கள் கார் மற்றும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, லடாக்கின் இயற்கை அழகையும் சீரழிக்கும்.


Click it and Unblock the Notifications








