இந்தியாவில் அமெரிக்க தரத்திற்கு சாலை!! இவரே சொல்லிட்டாரா... 2024 முடியறதுக்குள் இது நடக்கும்!
உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் சாலைகள் இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு வந்துவிடும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது முழு பேட்டியையும், இந்த மாநிலத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைகள் குறித்தும் விரிவாக இனி பார்க்கலாம்.
உலகளவில் தரமான சாலைகளை கொண்ட நாடுகளுள் ஒன்றாக அமெரிக்காவை சொல்லலாம். நம் இந்திய நாட்டில் எல்லா இடங்களிலும் இல்லை என்றாலும், முக்கிய மாநகரங்களில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் சமீப காலங்களில் வந்துவிட்டன. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமெரிக்காவில் உள்ள சாலைகளின் தரத்திற்கு வந்துவிடுமாம்.

இதை கூறியவர் யார் என்றால், மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆவார். இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர், சாலை மேம்பாட்டு மற்றும் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு 2 லட்ச கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். ரூ.2 லட்ச கோடி என்பது மொத்தமாக உத்தரகாண்ட் மாநில சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஆகும்.
இதில் முதற்கட்டமாக, ரூ.2,000 கோடி நிதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார். வட இந்தியாவில், தலைநகர் டெல்லிக்கு மேலே அமைந்துள்ள ஓர் அழகிய மாநிலமான உத்தரகாண்டில் தற்போதைக்கு 3,608கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் பரந்து விரிந்துள்ளன.

மேலும், உத்தரகாண்டில் நிறைய புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில சாலை திட்டங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இதில் முக்கியமானது, உத்தரகாண்ட் தலைநகர் டெஹ்ராடூன் மற்றும் தேசிய தலைநகர் டெல்லியை இணைக்கும் விரைவுச்சாலை திட்டம் ஆகும். டெல்லி- டெஹ்ராடூன் இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் விதமாக இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், "முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உத்தரகாண்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் அமெரிக்காவில் உள்ளதை போல் சர்வதேச தரத்தில் அமையும் என்று அறிவிக்க விரும்புகிறேன்" என கூறியதுடன், உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலை அமைப்பை மேம்படுத்த மத்திய அரசு நிதியை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய மத்திய அமைச்சர், "உத்தரகாண்டில் தற்போது சாலை உள்கட்டமைப்புக்காக ரூ.1.40 லட்ச கோடி செலவிடப்படுகிறது. மேலும், ரூ.60 ஆயிரம் கோடி விரைவில் சேர்த்து மொத்தமாக ரூ.2 லட்ச கோடி செலவிடப்படும்" என தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை போல், டெல்லி- டெஹ்ராடூன் விரைவுச்சாலை இந்த ஆண்டுக்குள் நிறைவுப் பெற்றுவிடும் என உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுமார் 340 கிமீ தொலைவிற்கு டெல்லி- டெஹ்ராடூன் விரைவுச்சாலை அடர்ந்த காட்டிற்கு மத்தியில் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விரைவுச்சாலை அமைவதன் மூலம், டெல்லியில் இருந்து டெஹ்ராடூனை ஏறக்குறைய வெறும் 3 மணிநேரங்களில் அடைந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரைவுச்சாலைக்கான மொத்த செலவு ரூ.8,300 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தேசிய தலைநகரை இணைக்கும் மற்றொரு விரைவுச்சாலை என்பதினாலேயே இந்த திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், எதிர்பார்க்கும்படி இந்த 2024ஆம் ஆண்டு முடிவதற்குள்ளாக இந்த விரைவுச்சாலை பணிகள் நிறைவு பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காட்டிற்கு மத்தியில் அமைந்தாலும், விலங்குகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில், அந்த பகுதியில் மட்டும் தூண்களுடன் மேம்பாலாக இந்த விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









