நல்ல மனசு... தொழிலாளர்கள் வேலைக்கு வர விமானத்தில் டிக்கெட் போட்ட விவசாயி... எவ்ளோ செலவு தெரியுமா?
தொழிலாளர்கள் ஊருக்கு செல்வதற்கும், அவர்கள் மீண்டும் வேலைக்கு வரவும் விமான பயணத்தை ஏற்பாடு செய்து வரும் விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு திடீரென அமல் செய்யப்பட்டதால், வெளி மாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் ஆங்காங்கே சிக்கி கொண்டனர். பேருந்து, ரயில், விமானம், ஆட்டோ, டாக்ஸி என பொது போக்குவரத்து அனைத்தும் மார்ச் 24ம் தேதியில் இருந்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

எனவே வெளி மாநிலங்களில் பணியாற்றி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர். இதில், ஒரு சிலர் சைக்கிள் உள்ளிட்ட சொந்த வாகனங்கள் மூலமாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணம் செய்து சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். இன்னும் சிலரோ நடந்தே ஊர் திரும்பினர்.

ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் நடக்க வேண்டிய சூழலும் கூட ஒரு சிலருக்கு ஏற்பட்டது. வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வந்த முதலாளிகளும், ஒரு சில நிறுவனங்களும் அவர்களை அப்படியே கை விட்டு விட்டன. வெளி மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசாங்கத்தின் மீதும் கூட கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் பப்பன் சிங்கிடம் பணியாற்றிய வெளி மாநில தொழிலாளர்கள் யாருக்கும் இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்படவில்லை. தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள டிஜிபுர் என்னும் கிராமத்தில் இவர் காளான் விவசாயம் செய்து வருகிறார். தன்னிடம் பணியாற்றிய 10 தொழிலாளர்களை இவர் கடந்த மே மாதம் விமானம் மூலமாக அவர்களின் சொந்த ஊரான பீகாருக்கு அனுப்பி வைத்தார்.

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே தங்கள் ஊழியர்களுக்கு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை பெரிய அளவில் வழங்குவது கிடையாது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தங்கள் ஊழியர்களை விமானத்தில் பயணம் செய்ய வைக்கின்றன. அப்படி இருக்கையில் ஒரு சாதாரண விவசாயி, ஊரடங்கு காரணமாக தன் பணியாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்தது மிகப்பெரிய விஷயம்தான்.

தற்போது பப்பன் சிங் இன்னும் ஒரு படி மேலே போய் உள்ளார். இவர் கடந்த மே மாதம் விமானத்தில் ஊருக்கு அனுப்பி வைத்த 10 தொழிலாளர்களையும் மீண்டும் டெல்லி அழைத்து வருவதற்கு தற்போது விமானத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார். அவர்களுடன் மேலும் 10 தொழிலாளர்களுக்கும் என மொத்தம் 20 தொழிலாளர்கள் விமானம் மூலம் டெல்லி வருவதற்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

இவர்கள் 20 பேரும் டெல்லி வருவதற்காக 1 லட்ச ரூபாய்க்கும் மேலான தொகையை பப்பன் சிங் செலவிட்டு விமான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளார். இதன் மூலமாக அவர்கள் மீண்டும் டெல்லி வந்து ஆகஸ்ட் - ஏப்ரல் பருவத்தில் காளான் விவசாயத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த 20 பேரில், 10 பேர் தற்போதுதான் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி (நாளை மறு நாள்) வரவுள்ளனர். பப்பன் சிங்கின் பணியாளர்களில் ஒருவரான நவீன் ராம் தற்போது, பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருக்கிறார். 20 பேரில் ஒருவராக இவரும் விமானம் மூலம் டெல்லி வரவுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''விமானத்தில் பயணம் செய்வதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் விமானத்தில் பயணம் செய்வதில் இம்முறை எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. ஏனெனில் கடந்த மே மாதம் முதல் முறையாக நான் விமானத்தில் பயணம் செய்திருந்தேன்'' என்றார். பப்பன் சிங் கடந்த மே மாதம் விமானம் மூலம் அனுப்பி வைத்த பணியாளர்களில் இவரும் ஒருவர்.

விமானத்திற்கு பதிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் ரயில்கள் எதுவும் இல்லை எனவும் நவீன் ராம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''காளான் விவசாயத்தின் நடப்பு பருவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி விட்டது. நாங்கள் இன்னும் ரயில்களுக்காக காத்து கொண்டிருந்தால் காளான் விவசாயத்தை செய்ய முடியாது.

இதுகுறித்து எங்கள் முதலாளியிடம் (பப்பன் சிங்) கூறியபோது, தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் விமானத்தில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதாக கூறினார்'' என்றார். அதே சமயம் தனது முதல் விமான பயண அனுபவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். கடந்த மே மாதம் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தபோது ஒரு வித தயக்கத்தை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அப்போது பயணம் செய்த 10 பேருக்கும், அதுதான் முதல் விமான பயணம். இதனால் யாருக்குமே விமான நிலைய நடைமுறைகள் எதுவும் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது விமான நிலைய நடைமுறைகள் பற்றி தனக்கு தெரியும் என நவீன் ராம் தெரிவித்துள்ளார். விமான டிக்கெட்களை முன்பதிவு செய்திருப்பதுடன் இன்னும் ஒரு நல்ல காரியத்தையும் பப்பன் சிங் செய்துள்ளார்.

நவீன் ராம் கூறியுள்ள தகவல்களின்படி, இம்முறை விமானத்தில் பயணம் செய்யவுள்ள 20 பணியாளர்களும் தங்கள் சொந்த ஊரில் இருந்து வரும் ஆகஸ்ட் 27ம் தேதி, பீகார் மாநில தலைநகரான பாட்னாவில் உள்ள விமான நிலையத்தை வந்தடைவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளையும் பப்பன் சிங் செய்து தந்திருக்கிறார்.

பப்பன் சிங் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் காளான் விவசாயம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இம்முறை 1 ஏக்கரில் மட்டுமே அவர் விவசாயம் செய்யவுள்ளார். பணியாளர்கள் குறித்து அவர் கூறுகையில், ''என்னிடம் வேலை செய்பவர்களை எனது குடும்பத்தில் ஒருவர் போலதான் நடத்துவேன்.

அவர்கள் எனக்காக 15 முதல் 25 ஆண்டுகளாக வேலை செய்து கொண்டுள்ளனர்'' என்றார். முதலாளி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக திகழும் பப்பன் சிங்கிற்கு தற்போது சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








